Tuesday, September 27, 2016

தம்பதிகளே கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள்...

ஆனந்தவேதம் - தாம்பத்தியம் !!!
ராதேக்ருஷ்ணா தாம்பத்தியம் ஒரு வரப்ரசாதம் !

உலகின் மிக உயர்ந்த ஒரு தெய்வானுக்ரஹம்
தாம்பத்யம் ! பகவானும்,தாயாரும் கூட  திவ்ய தம்பதிகளாகவே
காட்சி தருகின்றனர் ! தாம்பத்தியத்தினால்தான் உலகில் சந்ததி உண்டாகிறது !

ப்ரும்மசரியத்தைக் காட்டிலும், வானப்ரஸ்தத்தைக் காட்டிலும், சன்யாசத்தைக் காட்டிலும், க்ருஹஸ்த தர்மமே மிக உயர்ந்தது! 

தாம்பத்தியத்தில் தெய்வீகத்தை உணரவேண்டும்! தாம்பத்தியத்தின் லக்ஷியம் பரமானந்தமே! 
தாம்பத்தியத்தின் லக்ஷியம் தெய்வ தரிசனமே! 

தாம்பத்தியத்தை நல்லபடி நடத்தினால் வீட்டிலேயே தெய்வத்தைப் பார்க்கலாம் . .  

அதற்கு என்ன செய்ய வேண்டும் ? ? ?
அதற்கு விரோதமானவை என்ன ? ? ?

தம்பதிகளே கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள் . . . அவரவர் ப்ராரப்தத்திற்கு தகுந்தவாறே கணவனும், மனைவியும் அமைகின்றனர் ! 

ஆனால் உன்னதமான பக்தியினால் பூர்வ ஜன்ம கர்ம வினையை மாற்றி நிம்மதியான தாம்பத்தியத்தை அனுபவிக்க முடியும் ! 

எது எப்படியோ உனக்கென்று ஒரு வாழ்க்கையை பகவான் கொடுத்திருக்கிறான் ! அதை முதலில் புரிந்துகொள் !
உலகில் கல்யாணம் என்கின்ற ஒன்று நடக்காமல் பரிதவிப்பவர்கள் பலர் உண்டு !
கல்யாணம் ஆனபிறகும் தன் ஜோடியை இழந்து தவிப்பவர்கள்
பல கோடி உண்டு !

இருப்பதை ஜாக்கிரதையாக வைத்துக்கொள்ளவேண்டியது
மனித தர்மம் . . .

  • கணவனை மனைவி க்ருஷ்ணனின் ப்ரசாதமாக நினைக்க வேண்டும்! மனைவியை கணவன் க்ருஷ்ணனின் ப்ரசாதமாக
    ஏற்றுக்கொள்ள வேண்டும்!
  • கணவனிடத்தில் உள்ள உயர்ந்த குணங்களை மனைவி
    புரிந்துகொள்ள வேண்டும் ! மனைவியிடத்தில் உள்ள உயர்ந்த
    பண்புகளை கணவன் தெரிந்துகொள்ள வேண்டும் !
  • கணவனிடத்தில் உள்ள குறைகளை மனைவி தெரிந்துகொண்டு அதை மாற்ற விடா முயற்சி எடுக்கவேண்டும் ! மனைவியிடத்தில் உள்ள குறைகளை கணவன் புரிந்துகொண்டு அதிலிருந்து
    அவளை மீட்கவேண்டும் !
  • கணவன் மனைவியை அடுத்தவர் முன் அவமானப்படுத்தவே கூடாது ! மனைவி கணவனைப்பற்றி அடுத்தவரிடம் மறந்தும்
    கேவலமாகப் பேசவே கூடாது !
  • கணவன் குடும்பத்திற்கு வேண்டியதை சம்பாதித்துக் கொடுக்கவேண்டும்! மனைவி கணவனின் சம்பாத்யத்திற்குத் தகுந்தபடி குடும்பத்தை நடத்தவேண்டும் !
  • கணவனை மனைவி ஆத்மாவாக பார்க்கவேண்டும் ! மனைவியை கணவன் ஆத்மாவாக உணரவேண்டும் !
  • கணவனின் தர்ம காரியங்களுக்கு மனைவி என்றுமே
    உறுதுணையாக இருக்க வேண்டும் ! கணவன் என்றுமே
    மனைவியை தர்மகாரியங்களில் ஈடுபடுத்தவேண்டும் !
  • எந்த ஒரு நிலைமையிலும், கணவன் மனைவியை அடிமையாக நினைக்கவே கூடாது ! எந்த ஒரு அவசரத்திலும், மனைவி கணவனை கேவலமாக நினைக்கவே கூடாது !
  • கணவனிடத்தில் மனைவி எப்பொழுதும் உண்மையாகவே
    இருக்கவேண்டும் ! மனைவியிடத்தில் கணவன்
    எப்பொழுதும் ஒழுங்காக நடந்துகொள்ளவேண்டும் !
  • கணவனின் பலம், பலவீனம், தேவை,  ஆகியவற்றை மனைவி
    நன்றாக புரிந்துகொள்ளவேண்டும்! மனைவியின் மனம்,தவிப்பு,தேவைகள் ஆகியவற்றிற்கு கணவன்
    மரியாதை அளிக்கவேண்டும் !
  • மனைவியை கணவன் காமப்பொருளாக மட்டும் பார்க்காமல்
    அவள் சரீரத்தின் கஷ்ட நஷ்டங்களை புரிந்து நடந்து கொள்ளவேண்டும் ! கணவனை மனைவி தன் ஆசைகளை பூர்த்தி செய்யும் ஒரு இயந்திரமாகப் பார்க்காமல், அவனுடன் தோள் கொடுத்து நிற்கவேண்டும்!
  • மனைவியின் முட்டாள்தனங்களையோ, குறைகளையோ, உடல் அழகைப்பற்றியோ, தவறுகளையோ, கணவன் மறந்தும்
    அடுத்தவரிடம் வெளியிடக்கூடாது! கணவனின் அசட்டுத்தனங்களையோ, நஷ்டங்களையோ,கெட்ட குணங்களையோ, மனைவி ஒரு நாளும் மற்றவரிடம்
    கலந்து பேசவே கூடாது !
  • எந்த சமயத்திலும் கணவன் மனைவியை தள்ளி வைத்துவிடலாம்
    என்று தீர்மானிக்கவே கூடாது ! மனைவி எந்த நிலைமையிலும்
    கணவன் தனக்கு அவசியமில்லையென்றோ, விலகலாம் என்றோ யோசிக்கவே கூடாது !
  • ஒரு பொழுதுகூட மனைவி, இவனை கணவனாக அடைந்துவிட்டோமே என்று நினைக்கவே கூடாது ! ஒரு தடவை கூட,கணவன், இவளை விட நல்ல மனைவி கிடைத்திருந்தால்
    நன்றாக இருந்திருக்கும் என்று யோசிக்கவே கூடாது !
  • என்றும் மனைவி அடுத்தவரின் கணவரோடு தன் கணவனை
    ஒப்பிட்டு நினைக்கவே கூடாது ! என்றும் கணவன் மற்றவரின்
    மனைவியை, தன் மனைவியோடு ஒப்பிட்டு பார்க்கவே கூடாது !
  • கணவனின் குடும்பத்தை மனைவி தன் குடும்பமாக
    பாவித்து சேவை செய்யவேண்டும் ! மனைவியின் குடும்பத்தை
    கணவன் தன்னுடையவர்களாகக் கருதி மரியாதையுடன் நடத்தவேண்டும் !
  • மனைவியின் உடல்நலத்தில் கணவன் என்றுமே அக்கரை உடையவனாக இருக்கவேண்டும் ! கணவனின் உடல்நலத்தில் மனைவி எப்பொழுதும் அக்கரையுடன் இருந்து கவனித்துக் கொள்ளவேண்டும் !
  • மனைவியானவள் கணவன் சொல்வதை
    சரியாகப் புரிந்துகொண்டு, அதன்படி நடக்க வேண்டும்.
    கணவனானவன் மனைவி சொல்லும் காரியங்களில் யோசனை செய்து, தகுந்தபடி செயல்படவேண்டும்.
  • மனைவி கணவனுக்கு ஒரு உத்தமமான மந்திரியைப் போல்
    ஆலோசனை சொல்லவேண்டும் . கணவன் மனைவியை ஒரு தோழியாக, நலம் விரும்பியாக, குழந்தையாக பாவித்து
    அவளுக்கு நல்லவற்றை சொல்லவேண்டும் !
  •  என்றுமே மனைவி மலர்ச்சியான முகத்தோடு கணவனுக்கு பணிவிடை செய்யவேண்டும் ! என்றுமே கணவன் ஆனந்தமான
    வார்த்தைகளால் மனைவிக்கு அன்பைத் தரவேண்டும் !
  • கணவன் மனைவியின் உடல் தேவைகளை புரிந்துகொண்டு
    அதற்கேற்றபடி அவளுடன் கூடவேண்டும்! மனைவி கணவனின் சுகத்திற்குத் தகுந்தபடி, தன்னை தயார் செய்துகொண்டு
    ஆனந்தத்தைத் தர வேண்டும் !
  • கணவன், மனைவியின் குறைகளை பெரிதாக நினைக்காமல், அவளுடைய உத்தம குணங்களை அனுபவிக்கவேண்டும் !
    மனைவி, கணவனின் குற்றங்களை பெரிதுபடுத்தாமல், அவனுடைய நல்ல பழக்கவழக்கங்களை கொண்டாடவேண்டும் !
  • கணவன் கோபப்படுகின்ற சமயத்தில் மனைவி, நிதானமாக இருக்க வேண்டும் ! மனைவிக்கு கோபம் வருகின்ற சமயத்தில்
    கணவன் அவளை சாந்தப்படுத்தவேண்டும் !
  • கணவனின் தோல்விகளில் மனைவி தைரியம் தந்து,நம்பிக்கை தந்து, அவன் வெற்றியடைய உறுதுணையாக இருக்கவேண்டும் !
    மனைவியின் அவமானங்களில் கணவன், அவளுக்கு சமாதானம் சொல்லி,அவளுடைய துக்கத்தை அழிக்கவேண்டும் !
  • கணவனின் சம்பாத்தியத்தில் குடும்பத்தை நடத்தி,அதே சமயத்தில் சொத்து சேர்க்கவும் மனைவி சிரத்தையுடன் இருக்கவேண்டும் ! மனைவியின் நியாயமான தேவைகளை
    பூர்த்தி செய்து,ஆடம்பர செலவினங்களைக் கணவன் கட்டுப்படுத்தவேண்டும் !
  • கணவனின் அழகிலோ,குணத்திலோ, அறிவிலோ, மனைவி ஒரு நாளும் அகம்பாவம் கொள்ளவே கூடாது! மனைவியின் அழகிலோ,புத்திசாதுர்யத்திலோ, நல்ல குணங்களிலோ, கணவன் எந்த ஒரு சமயத்திலும் கர்வப்படக்கூடாது !  

இதில் சொன்னதை கடைபிடித்துப் பாருங்கள் ! உங்கள் தாம்பத்தியமும் சிறக்கும் !

நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்

பாபநாசம் சிவஸ்தலம்

பாபநாசர் ருத்ரசாய் லிங்கம் (Pic. Source)
அம்மன் உலகம்மை (Pic. Source)




பொதிகை மலையின் உச்சியில் உருவாகும் தாமிரபரணியாறு சமதளத்தை அடையும் இடமே பாபநாசம் ஆகும். திருநெல்வேலியில் இருந்து அம்பாசமுத்திரம் வழியாக 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இத்திருத்தலம். நெல்லை, அம்பாசமுத்திரம், தென்காசி ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

சிவபெருமானுடைய திருக்கல்யாணத்தைத் தரிசிக்க தேவர்கள், முனிவர்கள் ஆகியோர் கயிலாயம் சென்றதால் கூட்டத்தைத் தாங்கமாட்டாது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. அதைச் சமன் செய்யும் பொருட்டு அகத்திய முனிவரை அழைத்து தென்திசைக்கு செல்லும்படி பணிக்கிறார் சிவபெருமான்.

பகவானின் கட்டளையை ஏற்று தென் திசையிலுள்ள பொதிய மலையில் எழுந்தருளினார் அகத்தியர். அவருக்கும் திருக்கல்யாணக் கோலத்தில் காட்சியளிக்க விரும்பிய சிவபெருமான், சக்தி சமேதராக அம்மை-அப்பனாக காட்சியளித்த இடமே பாபநாசமாகும்.
அகத்தியர் (Pic. Source)


பாபநாசத்துக்கு மேற்கே ஒரு மைல் தூரத்தில் உள்ள நீர்வீழ்ச்சியும் இதனால் 'கல்யாண தீர்த்தம்' என்று பெயர் பெற்றது. இங்கு அகத்திய முனிவருக்கு தனிக்கோயில் உள்ளது. அகத்தியர் கோயில் உள்ள இடம் பழைய பாவநாசம் என்றழைக்கப்படுகிறது. மலையுச்சியில் உற்பத்தியாகும் தாமிரபரணி சமபூமியில் இறங்குமிடமே பழைய பாவநாசமாகும். 

சூரிய தலம்

அகத்திய முனிவரின் முதல் சீடர் உரோமச முனிவர் பிறவிப் பெரும் பயன் அடைவதைப் பற்றி அகத்தியரிடம் கேட்க, அவர் பாபநாசம் தொடங்கி தாமிரபரணி ஆறு செல்லும் பாதையில் மலர்கள் ஒதுங்கும் இடங்களில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபடுமாறு கூறினார். அவ்வாறு பூக்கள் சேர்ந்த இடங்களில் உள்ள நவ கைலாயத் தலங்களை பிரதிஷ்டை செய்தார் உரோமச முனிவர். இவ்வாறு திருநெல்வேலியைச் சுற்றி நவக்கிரக தலங்கள் அமையப்பெற்றன. அவற்றில் பாபநாசம் சூரியனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது.

ஐதீக அம்சங்கள்

கிரக ரீதியாகவோ, ஜாதக ரீதியாகவோ குழந்தைகளுக்கு தோஷம் இருந்தால், அவர்களை இறைவனுக்கு தத்து கொடுத்து வாங்க உகந்த இடம்.
உலகம்மைக்கு நடைபெறும் அபிஷேக தீர்த்தத்தை பருகினால் திருமண, புத்திர பாக்கியங்கள் கிடைப்பதோடு தீர்க்க சுமங்கலியாக வாழலாம் என்பது ஐதீகம்.

 

பாபங்கள் கரையுமிடம்

அக்காலத்தில் ஒரு தாய் வயிற்றில் பிறந்த சிறுவனும், சிறுமியும் சந்தர்ப்ப சூழலால் குடும்பத்தை பிரிந்து தனியாக வாழ்ந்தார்களாம். காலங்கள் உருண்டோட, மற்றொரு சந்தர்ப்பத்தில் இருவரும் சந்தித்து, அண்ணன்-தங்கை என்பதை அறியாமலேயே திருமணம் செய்து கொள்கின்றனர். 

பின்னாட்களில் ஒரு நாள் இந்த உண்மை தெரியவரும்போது இருவரும் மிகவும் மனம் வெதும்பினர். அப்போது, பெரியவர்கள் சிலர், ‘நீங்கள் இருவரும் கருப்பு உடையணிந்து எல்லா புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடுங்கள். எப்போது உங்கள் கருப்பு ஆடை, வெண்மையாக மாறுகிறதோ அப்போது உங்கள் பாபம் நீங்கப் பெற்றது’ என்று பொருள் எனக் கூறி அனுப்பி வைக்கின்றனர்.

எல்லா நதியிலும் நீராடிவிட்டு கடைசியாக பாபநாசம் கோயில் முன்நின்று இருவரும் நீராட ஆடை வெண்மையாய் மாறியதாம்! ஆகவேதான், இந்நதி பாபநாசம் எனும் பெயர்பெற்றதாம் என்பது வரலாறு. கலியுக வாழ்வில் தெரிந்தும் தெரியாமலும் பல்வேறு பாவச் செயல்களுக்கு ஆட்படும் நாம், இப்புண்ணிய தலம் சென்று பாபவிநாசகரை வழிபட்டு பாபநாசம் புண்ணிய நதியில் மனச்சுத்தியுடன் புனிதநீராடி பாபங்கள் கரையப்பெறுவோமாக.

நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்
---------------------------

ஆலய முகவரி

அருள்மிகு பாவநாசர் திருக்கோயில்
பாபநாசம்
வி.கே.புரம் அஞ்சல்
அம்பாசமுத்திரம் வட்டம்
திருநெல்வேலி மாவட்டம்
627425
போன்: 04634 223268
கோயில் திறப்பு:
காலை 6.30 முதல் பகல் 12 மணி
மாலை 4.30 முதல் இரவு 8 மணி

சௌமிய தாமோதர பெருமாளின் மகிமை (வில்லிவாக்கம், சென்னை)

வடமொழியில் தாமோ என்றால் கயிறு. உதரம் என்றால் வயிறு. ஒருதாய் வயிற்றில் பிறந்தவர்களை சகோதரர்கள் (சகோ+உதரம்) என்று அழைப்பர்.
இங்கு, குழந்தை பாலகனாய் தவழ்ந்த பெருமாள், குழந்தைத்தனத்துக்கே உரிய குறும்புத்தனங்களை செய்ததால், அவரது தாய் பெருமாளின் வயிற்றில் கயிற்றை கட்டி ஓரிடத்தில் அமரவைத்தாராம்.

ஸ்ரீ அமிர்தவல்லி நாயகா சமேத ஸ்ரீ சௌமிய தாமோதர பெருமாள் Temple link


அச்சமயம் பார்த்து உறவினர்கள் வீட்டுக்கு வர, பாலகனை கயிற்றில் கட்டி வைத்ததை அவர்கள் எவ்வாறு கருதுவார்களோ என பதறினாராம் தாய். இதையறிந்த பெருமாள், அக்கயிறை, பூக்கயிறாய் மாற்றி தாயின் மனத்தாங்கலை போக்கினார்.

இதனால் பெரும் மகிழ்வுற்ற தாய், அன்பு, அறிவு, அழகும் கொண்டு தனித்திறனுடன் மிளிர்வாய் என பெருமாளை ஆசிர்வதிக்கிறார். 

இத்திருத்தலத்துக்கு வந்து பெருமாளை சேவிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் அவ்வண்ணமே அன்பும், அறிவும், அழகும், தனித்திறன்களும் கைகூடும் வகையில் பெருமாள் அருள்பாலிக்கிறார்.

குழந்தைபேறை எதிர்நோக்கி காத்திருக்கும் மகளிரும், கருவுற்றிருக்கும் தாய்மார்களும் இங்கு வந்த சௌமிய தாமோதர பெருமாளை சேவித்தால் அத்தகைய சிறப்பும், ஆயகலைகளில் தனித்திறனும் பொருந்திய குழந்தை பிறக்கும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.

தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் வேண்டிய அருட்கடாட்சத்தை அருளும் பரிகாரஸ்தலமாக சௌமிய தாமோதர பெருமாள் திருக்கோயில் விளங்குகிறது.

நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்

Thursday, September 22, 2016

Chandra Astama (சந்திராஷ்டமத்தின் சூட்சமம்!)

சந்திராஷ்டமம் என்றால் சந்திரன் அலைகள் நமது மனதிற்க்கு கிடைக்காத பலவீனமான நாள் என பொருள்படும்.



நமது ஜென்மத்தில் அமையும் சந்திரனின் இடத்தில் இருந்து எட்டாவது இராசியில் (அஷ்டமம்) சந்திரன் வரும்போது நமக்கு சந்திரனின் கதிர்கள் கிடைப்பது மிகவும் குறைவாகவோ அல்லது சந்திரனின் நிலையினை அனுசரித்து இல்லாமலோ கூட போகிறது. 

அஷ்டமம் எனும் மறைவிடத்தில் சந்திரன் வரும்போது, அந்த அமைப்பு, சந்திரனின் கதிர்கள் இன்னும் கூட துல்லியமாக நமக்கு கிடைப்பதனை தடை செய்யும் அமைப்பாக உள்ளது. குறிப்பாக, நமது ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து பதினேழாவது நட்சத்திரமே மிகவும் பலவீனமான நட்சத்திரமாகும்... இந்த நட்சத்திரத்தை சந்திரன் கடக்கும்போது சந்திராஷ்டமம் உச்சத்தில் இருக்கும்.

இத்தகைய நாட்களில் நாம் எடுக்கும் புதிய கருத்துக்கள் மற்றும் முடிவுகளை சில நாள்கள் கழித்து எண்ணும்போது நாம் வருத்தப்படும்படி மாறுவதை உணர்வோம். ஆகவே சந்திராஷ்டம தினத்தில் வாழ்வியல் முடிவுகள் எடுப்பதை தவிர்ப்போம்.

இந்த உண்மையை அறிந்து கொண்டால் சந்திராஷ்டமத்தைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியமில்லை. 

எனினும், நமது பலவீனமே பலத்தை காட்டும் முகக்கண்ணாடியாக அமையும். ஆகையால், இத்தகைய சந்திராஷ்டம தினத்தில் எதைச் செய்யக்கூடாது என்பதை அறிந்த நாம், இனி என்ன செய்யலாம் என்பதை அடுத்த பதிவில் அறிவோம்...

நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்
லஷ்மி குபேரன் ஜோதிட ஆராய்ச்சி மையம்

Tuesday, September 13, 2016

Navagrahas and Diya (அகல் விளக்கின் நவகிரஹ தத்துவம்)

கோயில்களிலும் ,வீடுகளிலும் நாம் அகல் விளக்கு வைத்து வழிபடுகிறோம்.


இதன் அர்த்தம் தெரிந்து கொள்வோம்.
1). அகல் விளக்கு = சூரியன் ஆகும்
2.) நெய்/எண்ணெய்-திரவம் = சந்திரன்
3.) திரி = புதன்
4). அதில் எரியும் ஜ்வாலை =செவ்வாய்
5). இந்த ஜ்வாலையின் நிழல் கீழே = ராகு
6). ஜ்வாலையில் உள்ள மஞ்சள் நிறம் = குரு
7). ஜ்வாலையில் அடியில் அணைந்தவுடன் இருக்கும் கரி =சனி
8). வெளிச்சம் பரவுகிறது - இதுஞானம் = கேது
9). திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது = சுக்கிரன் (ஆசை); 

அதாவது ஆசையை குறைத்துக்கொண்டால் சுகம் என அர்த்தம்
ஆசைகள் நம்மை அழிக்கிறது; 
Lamp (Source)


மோட்சம் கிடைக்காமல் மீண்டும் மீண்டும் கர்மா நம்மை மனிதப்பிறவியாக ஜனனம் எடுக்கச்செய்கிறது....

இதுவே அகல் தீபம் நமக்கு உணர்த்தும் தத்துவம்

நற்பவி நற்பவி நற்பவி

நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்

Monday, September 12, 2016

Pithru Tharpanam on Mahalaya Amavasya

நமது மூதாதையர்களின் அருளாசியே நம்மை காக்கும் கவசங்களாகும்.
ஒருவன் எந்த ஒரு செல்வத்தை இழந்தாலும், வறுமையின் எல்லையில் நின்று வாழ்வை நொந்தாலும், அவனது முன்னோர்களான பித்ருக்களின் ஆசிர்வாதம் மட்டும் இருந்தாலே போதும்.



கடக்க முடியாத காட்டாற்று வெள்ளத்திலும் கிடைக்கும் மரக்கலன்போல பித்ருக்களின் ஆசி அமையும். 

எனவேதான் பித்ருக்களுக்கு தர்ப்பணம் இடுவது என்பது நம்மை நாமே காத்துக்கொள்வதற்காக நாம் அணிந்து கொள்ளும் கவசத்துக்கு ஒப்பாகும்.
வரும் மஹாளய அமாவாசையை முன்னிட்டு வரும் 16-ம் தேதி பிரதமை திதியில் இருந்தே பித்ருக்களுக்கு தர்ப்பணம் அளிக்கத் தொடங்கலாம்.
ஒவ்வொரு திதியிலும் அளிக்கப்படும் பித்ரு தர்ப்பணத்தால் எவ்வகை பலன் கிட்டும் என்பது யஜூர் வேதத்தில் விளக்கப்பட்டுள்ளது. (யஜூர் வேத ஆபஸ்தம்ப தர்ப்பணம்)

பிரதமை - செல்வம் பெருகும் (தனலாபம்)
துவிதியை - வாரிசு வளர்ச்சி (வம்ச விருத்தி)
திருதியை - திருப்திகரமான இல்வாழ்க்கை (வரன்) அமையும்
சதுர்த்தி - பகை விலகும் (எதிரிகள் தொல்லை நீங்கும்)
பஞ்சமி - விரும்பிய பொருள் சேரும் (ஸம்பத்து விருத்தி)
சஷ்டி - தெய்வீகத் தன்மை ஓங்கும் (மற்றவர் மதிப்பர்)
சப்தமி - மேலுலகோர் ஆசி
அஷ்டமி - நல்லறிவு வளரும்
நவமி - ஏழு பிறவிக்கும் நல்ல வாழ்க்கைத் துணை
தசமி - தடைகள் நீங்கி விருப்பங்கள் நிறைவேறும்
ஏகாதசி - வேதவித்யை, கல்வி, கலைகளில் சிறக்கலாம்
துவாதசி - தங்கம், வைர ஆபரணங்கள் சேரும்
திரியோதசி - நல்ல குழந்தைகள், கால்நடைச் செல்வம், நீண்ட ஆயுள் கிட்டும்
சதுர்த்தசி - முழுமையான இல்லறம் (கணவன் மனைவி ஒற்றுமை)
அன்பர்கள் அனைவரும் பித்ருக்களை பூஜித்து பிறவிக் கடலில் துன்பமின்றி பயணிக்க வேண்டுகின்றேன்.

மஹாளய அமாவாசை


எமதர்மராஜன் சென்று அவர் நம் முன்னோர்களை அழைத்து மஹாளய பட்சம் ஆரம்பிக்கும் நாளன்று நம் முன்னோர்களை அவரவர்கள் விருப்பமான இடத்திற்கு சென்று வரும்படி அனுமதிப்பாராம்.

நம் முன்னோர்களுக்கு விருப்பமான இடம் நம் இல்லம் தானே, எனவே அவர்கள் மஹாள்ய பட்சமான பதினைந்து நாட்களும் முன்னோர்கள் நம் இல்லத்தில் வந்திருப்பதாக நம்பிக்கை.

இந்த பதினைந்து நாட்களும் நம் வசிப்பிடத்தை சுத்தமாக வைத்திருந்து நம் முன்னோர்களை வணங்கி வந்தால் நம் வாழ்க்கை விருத்தியடைவது உறுதி.

எந்த திதியில் என்ன பலன்


மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள் தரப்பட்டுள்ளன.

  • முதல்நாள் - பிரதமை - பணம் சேரும்
  • இரண்டாம் நாள் - துவிதியை - ஒழுக்கமான குழந்தைகள் பிறத்தல்
  • மூன்றாம் நாள் - திரிதியை - நினைத்தது நிறைவேறுதல்
  • நான்காம் நாள் - சதுர்த்தி - பகைவர்களிடமிருந்து தப்பித்தல்
  • ஐந்தாம் நாள் - பஞ்சமி - செல்வம் சேரும் நியாயமான சொத்துகள் கிடைக்கும். வீடு, நிலம் முதலான சொத்து வாங்குதல்
  • ஆறாம் நாள் - சஷ்டி - புகழ் கிடைத்தல்
  • ஏழாம் நாள் - சப்தமி - சிறந்த பதவிகளை அடைதல் உத்தியோகத்தில் தலைமைப் பதவி கிடைக்கும், தடை பட்ட பதவி உயர்வு கிடைக்கும்.
  • எட்டாம் நாள் - அஷ்டமி - சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல்
  • ஒன்பதாம் நாள் நவமி - திருமண தடை நீங்கும். சிறந்த வாழ்க்கைத்துணை, குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைதல், பேத்தி, புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறத்தல். குடும்ப ஒற்றுமை சிறப்படையும்.
  • பத்தாம் நாள் - தசமி - நீண்ட நாள் ஆசை நிறைவேறுதல், எல்லா விருப்பங்களும் நிறைவேறும்.
  • பதினொன்றாம் நாள் - ஏகாதசி - படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி
  • பன்னிரெண்டாம் நாள் - துவாதசி - தங்கநகை சேர்தல், விலை உயர்ந்த ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.
  • பதின்மூன்றாம் நாள் - திரயோதசி - பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில்
  • பதினான்காம் நாள் - சதுர்த்தசி - ஆயுள் விருத்தியாகும், பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை.
  • பதினைந்தாம் நாள் - மகாளய அமாவாசை - முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குதல்.

எனவே, மகாளய பட்சம் என்னும் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இருந்தால் லாபம் நமக்கு மட்டுமல்ல! நம் தலைமுறைக்கும் சேர்த்து தான்.
மகாளய பட்சம் தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்களின் ஆசியுடன் நமது வாழ்க்கையும் நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும் என்பது நிச்சயம்.

Om Guruve Namaha...


நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்

பித்ரு தோஷம் என்றால் என்ன?

பித்ருக்கள் என்ற சொல் இறந்து போன நமது முன்னோர்களைக் குறிக்கும். தந்தை வழியில் மற்றும் தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்கள் ஆவர். தந்தை வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பிதுர் வழி பித்ருக்கள் எனவும், தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது மாதுர் வழி பித்ருக்கள் எனவும் அழைக்கப்படுவர். மொத்தத்தில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்களே ஆவர்.

நம்முடைய இந்த உடல், உயிர் மற்றும் பொருள் அனைத்தும் நம் பித்ருக்கள் அளித்ததே. நம்முடன் வாழ்ந்த நம்முடைய முன்னோர்களான நமது பித்ருக்கள் நமக்கு அளித்த இந்த உடல், உயிர் மற்றும் பொருள் இவற்றை நாம் அனுபவித்து வருகிறோம். அவ்வாறு நாம் அனுபவிக்கும் போது நமது பித்ருக்கள் செய்த பாவம் மற்றும் புண்ணிய பலனையையும் சேர்த்தே அனுபவித்து வருகிறோம். நம்முடன் வாழ்ந்து மறைந்த நமது பித்ருக்கள் எப்போதும் நமது நலனையே விரும்புபவர்கள்.

நமது பித்ருக்கள் நம்முடன் வாழும் போது அவர்களை பேணிக் காத்து பசியினை போக்க வேண்டும். அதே போல் அவர்கள் மறைந்த பின்பும் அவர்களின் பசியைப் போக்க வேண்டும். இதுவே பிதுர்கடன் எனப்படும். இதையே திருக்குறள் தந்த திருவள்ளுவர் நீத்தார் கடன் என்ற அதிகாரத்தில் தெளிவாக எடுத்துரைக்கிறார். நமது பித்ருக்களுக்கு நாம் செய்யும் வழிபாடு ஆவி வழிபாடு ஆகும். இதுவே நம் பண்டைய தமிழர்களின் முக்கிய வழிபாடு ஆகும். இந்த வழிபாடு தற்போது மறைந்து விட்டது.

ஆவிகள் என்றவுடன் நம்மில் சிலர் பயந்து போய் இருக்கலாம். பயம் கொள்ள தேவையில்லை. நமது முன்னோர்களின் ஆவிகள் மறுபிறப்பு எய்தும் வரை நமது நலனில் அக்கறை கொண்டவையாகவே இருக்கும். இத்தைகய நம்முடை முன்னோர்களின் ஆவிகளுக்கு நாம் செய்யும் வழிபாடு தான் பிதுர்கடன் எனப்படுகிறது. நமது பித்ருக்கள் தான் கடவுளரின் அருளை நமக்கு வெகு எளிதாக பெற்றுத் தரும் வல்லமை பெற்றவர்கள். நமது வேண்டுதல்களை எளிதில் நிறைவேற்றித் தருபவர்கள் நமது பித்ருக்களே.

எனவே நமது நலனில் அக்கறை கொண்ட நமது பித்ருக்களை நாம் வழிபாடு செய்து அவர்களின் பசியினைப் போக்க வேண்டும். அவ்வாறு பசியினை போக்காமல் விட்டுவிட்டால் நமது பித்ருக்கள் பசியினால் வாடுவர். அவ்வாறு பசியினால் வாடும் பித்ருக்கள் ஒவ்வொரு அமாவாசையன்றும் நமது இல்லங்களில் உள்ள நீர் நிலைகளில் வந்து தங்குவர். அமாவாசையன்று நாம் பித்ருக்களுக்கு வழிபாடு செய்து அவர்களின் பசியை போக்காமலோ இருந்தால் நமது பித்ருக்கள் வருத்தத்துடன் பிதுர்லோகம் செல்வர்.

வருத்தத்துடன் செல்லும் பித்ருக்களில் சிலர் கோபம் கொள்வர். அத்தகைய பித்ருக்கள் கோபத்தினால் நமக்கு சாபமும் அளிப்பர். இந்த சாபம் தெய்வத்தின் அருளையே தடை செய்யும் வலிமை கொண்டது. கடவுளின் வரங்களையே தடை செய்யும் ஆற்றல் கொண்டவர்கள் நமது பித்ருக்கள். எனவே நாம் அவர்களின் கோபத்திற்கோ அல்லது சாபத்திற்கோ ஆளாகாமல் இருப்பது நல்லது. மேலும் நமது பித்ருக்களின் பசியைப் போக்கி அவர்களை அமைதி படுத்த வேண்டும்.

பித்ரு தோஷம் என்பது ஜாதகத்தில் உள்ள தோஷங்களிலேயே மிகவும் வலிமையானது. இந்த தோஷம் உள்ள உள்ளவர்களின் வாழ்க்கையில் படிப்பு, வேலை, திருமணம், மண வாழ்க்கை மற்றும் குழந்தை இவற்றில் ஏதேனும் ஒன்றில் தீராத பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. பிதுர் தோஷம் நீங்காமல் மற்ற பரிகாரங்கள் செய்தாலும் பரிகாரங்கள் பலன் தருவதில்லை. எத்தகைய மந்திர செபங்களும் சித்தியடைவதில்லை. இதற்கு காரணம் நமது பித்ருக்களின் சாபம் தான். எனவே முதலில் பிதுர் தோஷத்தினைப் போக்கிட வேண்டும்.

பிதுர் தோஷம் உள்ளவர்களின் ஜாதகம் பிதுர் தோஷம் நீங்கிய பின்பு தான் வேலையே செய்ய ஆரம்பிக்கும். இந்த தோஷம் இருக்கும் வரையில் ஜாதகத்தில் உள்ள எந்த ஒரு யோகமும் தன்னுடைய பலனை தராது. மாறாக பிதுர் தோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் துன்பமே மிஞ்சும். பிதுர் தோஷம் உள்ளவர்கள் முதலில் அதனை போக்கிட வேண்டும். அவ்வாறு நீங்கிய பின்னரே அவர்களின் வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்றமும் வரும் 

பிதுர் தோஷமும் பரிகாரங்களும்

ஒருவரின் ஜாதகத்தில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு, கேது இருந்தாலும், சூரிய சந்திரர்கள் ராகு அல்லது கேது கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் பித்ரு தோஷம் உள்ள ஜாதகமாக கருதப்படும். நிழல் கிரகங்களான் ராகுவும், கேதுவும் நமது முன்வினைகளை பிரதிபலிப்பவை. மேலும் ராகு தந்தை வழி பாட்டனாரைக் குறிக்கும் கிரகம் ஆகும். அதே போல் கேது தாய் வழி பாட்டனாரைக் குறிக்கும கிரகம் ஆகும். இந்த இரண்டு கிரகங்களும், ஒருவர் செய்த முன்வினை கணக்கினை தெளிவாக காட்டுபவை ஆகும்.


ராகுவும், கேதுவும் அவரவர் முன்னோர்கள் செய்த பாவ-புண்ணிய கணக்கினை தெளிவாக காட்டுவதோடு மட்டுமல்லாமல் அந்த பாவங்களை தீர்க்க முடியுமா அல்லது முடியாதா என்பதையும் காட்டும் கிரகங்கள் ஆகும். ராகு மற்றும் கேது ஆகிய இரண்டு பாம்பு கிரகங்களே கிரகங்களில் மிகவும் வலிமையானவை. ஆனால் தற்கால சோதிடமோ ராகு மற்றும் கேது ஆகியவற்றிற்கு பலமில்லை என்று கூறுகின்றன். ராகுவை ஞான-போக காரகன் என்றும் கேதுவை மோட்ச காரகன் என்றும் அழைப்பர்.

Ketu
Rahu
முன்பு குறிப்பிட்டவாறு ஜாதகத்தில் ராகு, கேது அமைந்திருந்தால் ஜாதகரின் படிப்பு, வேலை, திருமணம், மண வாழ்க்கை, குழந்தைப்பேறு இவற்றில் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன. இந்த பிரச்சனைகளுக்கான காரணம் நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களே. ஒருவர் தனது முற்பிறவிகளில் அவர் செய்த பாவங்களே அவருடைய இப்பிறவியில் ஜாதகத்தில் தோஷங்களாகவும், முற்பிறவிகளில் செய்த புண்ணியங்களே அவரது ஜாதகத்தில் யோகங்களாகவும் அமைகின்றன.

அதுமட்டுமல்லாமல் நமது முன்னோர்களிடமிருந்து இந்த உடல், உயிர் மற்றும் பொருள் இவற்றை பெறுவதால் நம் முன்னோர்களின் பாவ-புண்ணியங்களின் ஒரு குறிப்பிட்ட பகுதியை நாம் அனுபவித்தே ஆக வேண்டும் என்பது விதி ஆகும்.

நாம் நமது முன்னோர்களின் பாவத்தினை அனுபவித்தால் நம் முன்னோர்களின் புண்ணியத்தினையும் அனுபவித்தே ஆக வேண்டும். நம் முன்னோர்களின் பாவமும் நம்முடைய பாவமும் சேர்ந்து தலைமுறை தலைமுறைகளாக நம்மை பின்தொடர்கின்றன என்பதே உண்மை ஆகும்.
அவ்வாறு நாம் பாவங்களை அனுபவிக்கும் காலத்தில் ஒரு சில நன்மைகளும் நமக்கு விளையும். அவை நம்முடைய புண்ணியம் மற்றும் நம் முன்னோர்கள் செய்த புண்ணியத்தினால் விளையும் நன்மைகள் ஆகும். நாம் ஒவ்வொருவரும் நம்முடைய முன்னோர்களின் பாவத்தினையும், நம்முடைய பாவத்தினையும் அழித்து நம் முன்னோர்கள் மற்றும் நம்முடைய ஆன்மாக்கள் நற்கதி அடையுமாறு செய்தல் வேண்டும். நமது பித்ருக்களின் ஆன்மா நற்கதி அடைய தக்க பரிகாரங்களை மேற்கொள்ளல் வேண்டும்.
பித்ரு தோஷம் எதனால் வருகிறது?
பித்ரு தோஷம் நாம் நம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினாலும், நமது முன்னோர்கள் செய்த பாவங்களினாலும் ஏற்படுகிறது.

ஒரு ஆண் தன் முற்பிறவியில் தனது மனைவியை கவனிக்காமல் வேறு பெண்ணின் மோகம் கொண்டு அலைந்ததால் இப்பிறவியில் தனது மனைவியால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
ஒரு பெண் தன் முற்பிறவியில் தனது கணவனை கவனிக்காமல் வேறு ஆணின் மோகம் கொண்டு அலைந்ததால் இப்பிறவியில் தனது கணவனால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

ஒருவர் தன் முற்பிறவியில் தனது பெற்றோர்களை கவனிக்காமல் இருந்தால் பெற்றோர்கள் இடும் சாபம் மறுபிறவியில் பித்ரு தோஷமாக மாறுகிறது.
ஒருவர் தன் முற்பிறவியில் தனது சகோதர / சகோதரிகளுக்கு துன்பம் இழைத்திருந்தால் இப்பிறவியில் தனது சகோதர / சகோதரிகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

ஒருவர் தன் முற்பிறவியில் கருச்சிதைவு செய்திருந்தால் இப்பிறவியில் மகப்பேறு இல்லாமல் சந்ததி விருத்தியடையாமல் போகும் நிலையும் அமைகிறது.

பிதுர் தோஷம் தன்னையும், தன்னைச் சேர்ந்த குடும்பத்தையும், குழந்தைகளையும் பாதிக்கும்.நோய்கள், தேவையற்ற வம்புகள், கணவன் மனைவி பிரச்னைகளை உருவாக்கும்.குறைந்தது மூன்று தலைமுறைகள் பாதிப்படையும்.

மகாளய பட்சம் என்று ஒரு காலம் தமிழ்வருடத்தில்ஆண்டுக்கு ஒருமுறை வரும்.புரட்டாசிமாதத்தில் வரும் அமாவசையிலிருந்து முன்னதாக பிரதமை ஆரம்பித்து வரும் பதினைந்து நாட்களாகும்.இந்த 15 நாட்களில் பித்ருக்கள் பூமிக்கு வந்து தனது சந்ததியினருக்குஆசி வழங்குவார்கள்.அந்த 15 நாட்களில் நாம் பித்ரு தர்ப்பணம் செய்தால் அந்த தர்ப்பணம் நேரடியாக நமது பித்ருக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள்.பட்சம் முழுவதும் செய்ய முடியாதவர்கள் மகாபரணியிலும் அமாவசையன்றும் செய்தால் கூட போதும்.

ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களிலும் பிதுர்களுக்கு செய்யும் தர்ப்பணம் மற்றும் தானங்கள் நமது அனைத்து தோஷங்களையும் நீக்கும்.மிகக்கடுமையான பிதுர் தோஷம் உடையவர்கள் இராமேஸ்வரம் சென்று திலா ஹோமம் செய்வது அவசியம்.இந்த திலா ஹோமம் வேதம் அறிந்த பண்டிதர்களால்தான் செய்ய வேண்டும்.திலா ஹோமம் எனப்படுவது நெல்லையும் எள்ளையும் கலந்து செய்யப்படும் ஹோமம் ஆகும்.திலம் என்றால் எள் என்று அர்த்தம்.திலா ஹோமம் செய்பவர்கள் அன்று இரவு இராமேஸ்வரத்தில்தங்க வேண்டும்.நேராக வீட்டுக்கு எடுத்துச் செல்வது தவறு.சிரத்தையுடன் செய்தால் தான் முழுப்பலனும் கிடைக்கும்.

திலா ஹோமம் முடிந்து பிண்டங்களை கடல் நீரில் கரைக்கும் போது கருடபகவான் அங்கு வட்டமிட வேண்டும்.இந்த சம்பவம் நிகழ்ந்தால்தான் மகாவிஷ்ணு நம்மை ஆசிர்வதிப்பதாக அர்த்தம்.வைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் ராமேஸ்வரம் அருகில் உள்ள திருப்புல்லாணிக்கரையில் திலாஹோமம் செய்து பித்ருக்களின் ஆசிர்வாதம் பெறலாம்.கேரளாவில் திருவனந்தபுரம் அருகில் உள்ள சுராம க்க்க்ஷேத்த்ரம்என்ற ஸ்தலம் உள்ளது.அங்கும் பித்ருக்களுக்குதர்ப்பணம் செய்யலாம்.

Pithrutharpanam in Kerela (Source)

பிதுர்சாந்தி செய்யாமல் செய்கின்ற எந்த பூஜைகளும் பலன் கொடுப்பதில்லை.கேரளாவில் பிதுர்சாந்திக்கு ஜென்ம நட்சத்திரத்தன்று பசுவுக்கு பருத்திக்கொட்டைபால் எடுத்து வெல்லம் கலந்து பித்ருக்களை வேண்டி உண்பதற்குக் கொடுக்கின்றனர்.வாழ்வில் ஒவ்வொருவரும் ஒருதடவையாவது காசி, கயா,இராமேஸ்வரம்சென்று பிதுர் ஹோமம் செய்ய வேண்டும்.


பித்ரு சாபம் நீங்க,பூர்வ ஜன்ம பாவங்களின் தீய விளைவுகள் தீர

ஞாயிற்றுக்கிழமை வரும் அமாவாசை அன்று சிறப்பு. முடியவில்லையெனில் ஏதேனும் ஒரு அமாவாசை அன்று ஆரம்பம் செய்யவும்.பின் இயன்ற வரை ஞாயிறு தோறும் செய்துவர பூர்வ ஜன்ம பாவங்கள் தீரும், சுப காரியங்களில் தடை நீங்கி நினைத்த காரியங்கள் கைகூடி வரும்.ஜாதகத்தில் பித்ரு சாபம் உடையவர்கள் இதைச் செய்ய பித்ரு சாபம் நீங்கி வாழ்வில் மங்களமான நிகழ்வுகள் நடக்கத் தொடங்கும்.

Monday, September 5, 2016

Vinayagar Special in Tamil (விநாயகர் ஸ்பெஷல்)


Pillayarpatti Karpaga Vinayagar
  • 'வி" என்றால் 'இதற்கு மேல் இல்லை" எனப் பொருள். நாயகர் என்றால் தலைவர் எனப் பொருள். இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்று பொருள்பட விநாயகர் என்று பெயரிடப்பட்டது.
  • கணபதி எனும் சொல்லில் 'க" என்பது ஞானத்தைக் குறிக்கிறது. 'ண" என்பது ஜீவர்களின் மோட்சத்தைக் குறிக்கிறது. 'பதி" என்னும் பதம் தலைவன் எனப் பொருள் படுகிறது.
  • தந்தையைப் போல் பிள்ளை, தாயைப் போல பிள்ளை என்பது தான் உலக வழக்கு. ஆனால், தன் தந்தை சிவபெருமானின் தோற்றத்தை விநாயகப்பெருமான் ஒத்திருப்பார். சிவபெருமானின் மற்றொரு வடிவமே விநாயகப்பெருமான் என்பர்.
  • சிவபெருமானைப் போலவே விநாயகப்பெருமான் சிவந்த மேனியை உடையவர்.
  • சிவபெருமானுக்கு 5 தலைகள் இருப்பது போல ஹேரம்ப கணபதிக்கு 5 தலைகள் இருக்கும். இருவருக்கும் மூன்று கண்கள்.
  • தலையில் இருவரும் மூன்றாம் பிறையணிந்திருப்பர்.
  • தந்தையைப் போல இவரும் ஐந்தொழில்களைச் செய்வார்.
  • இருவரும் நடனக்கோலத்தில் காட்சி தருவர்(நடராஜர், நர்த்தன கணபதி).
  • பார்வதி, சிவனின் இடப்பாகத்தில் இருப்பது போல், வல்லபை விநாயகரின் இடப்பக்கம் இருப்பாள்.

விநாயகர் வடிவ விளக்கம்

யானைத்தலை, கழுத்துக்குக் கீழே மனித உடல், மிகப் பெரிய வயிறு, இடது பக்கம் நீண்ட தந்தம், வலது பக்கம் சிறிய தந்தம் ஆகியவை உள்ளன. நீண்ட தந்தம் ஆண் தன்மையையும், சிறிய தந்தம் பெண் தன்மையையும் குறிக்கும். அதாவது ஆண், பெண் ஜீவராசிகள் அவருள் அடக்கம். பெரும் வயிறைக் கொண்டதால் பு+தர்களை உள்ளடக்கியவர். அவரே அனைத்தும் என்பதே இந்த தத்துவம்.

Sri Gnana Ganapathy at home of Kuberan Astrologer


முழுமுதற் கடவுளான யானை முகத்தோனை முறைப்படி வழிபட்டால் கைகூடாத செல்வங்களே இல்லை என்பர்.

நமது முன்னோர் அருளிச் சென்ற முறைகளை மனதில் கொண்டு, விநாயகர் சதுர்த்தி தினத்தில் (13.09.2018 - வியாழக்கிழமை) கணபதியை வணங்கி கீழ்காணும் இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்து பூஜித்தால் வேண்டிய செல்வம் கிட்டும்.

  • இளந்தை இலை – கல்வியில் மேன்மை
  • ஊமத்தை இலை – பெருந்தன்மை
  • வில்வம் இலை – நினைத்த காரியம் வெற்றி
  • அருகம்புல் – 16 செல்வங்களும் கைகூடும்
  • விஷ்ணுகிராந்தி – நுண் அறிவு
  • மாதுளை இலை – புகழ் மற்றும் நற்பெயர்
  • கண்டங்கத்திரி இலை – தைரியம்
  • அரலி இலை – தடைநீக்கம்
  • நாயுருவி இலை – முகப்பொலிவு
  • வன்னி இலை – இப்பிறவியில் அனைத்தும் கிட்டும்
  • முல்லம் இலை – அறம்
  • அரசு இலை – பதவி
  • அகத்தி கீரை – கடன் நிவர்த்தி
  • தாழம் பூ இலை – பொருளாதார மேன்மை
  • கரிசலாங்கன்னி – இல்வாழ்வில் மேன்மை
  • தவனம் – தம்பதி ஒற்றுமை (ரஜிபொருத்தம்)
  • மரிக்கொழுந்து – தாம்பத்யம் (யோனி பொருத்தம்)
  • தேவதாரு இலை – மனவலிமை, தைரியம்
  • ஜாதி மல்லி இலை – வீடு, மனை, பூமி லாபம், பூர்வீக சொத்து
  • மருதம் இலை – புத்திர பாக்கியம்
  • எருக்கு இலை – கருவில் இருக்கும் சிசுவை பாதுகாக்க

அன்பர்கள் அனைவரும், முன்னோர் வகுத்த முறைப்படி பிள்ளையாரை வணங்கி சகல சௌபாக்கியங்களும் பெற பிரார்த்திக்கிறேன்...

Om Guruve Namaha... 

 

நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்