Monday, April 8, 2019

Thirumeechayur Arulmigu Lalithambigai Ambal

தம்பதியரின் கருத்துவேறுபாட்டை களையும் லலிதாம்பிகை!

 

அழகாய் கோபிக்கும் அம்பிகையை அன்பாய் அரவணைக்கும் ஆண்டவன்!


Thirumeechayur Arulimigu Amma Sri Lalithambigai, Image source

ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் ஏழாமிடமான களத்திர ஸ்தானத்தை ஆராய்ந்தால், அவருக்கு அமையும் வாழ்க்கைத் துணை பற்றி துல்லியமாய் கணித்துவிடலாம். ஏழாமிடம் அற்புதமாய் அமைந்தால் இல்லறமே ஒரு சொர்க்கபுரியாக அமைந்துவிடும். இத்தகைய வரம் என்பது அனைவருக்கும் கிடைத்துவிடுவது கிடையாது. முன்ஜென்ம வினைப் பயனின் விளைவுகளைக் கொண்டே அது தீர்மானிக்கப்படுகிறது. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று இதைத்தான் கூறுவர், இது இருபாலருக்கும் பொருந்தும்.

மின்னல்வேகத்தில் சுழலும் காலச்சக்கரத்தில் வாழ்க்கைத் துணை உறுதுணையாய் இருந்தால் எதையும் சாதித்துவிட முடியும். நம்மில் இல்லறத்தில் முரண்பாடு கொள்ளாத தம்பதியே இல்லை எனலாம். எனினும், முரண்பாடுகளைக் களைந்து அன்யோன்யம் தழைக்கும் இல்லறத்துக்கு பேரருள் புரிகிறது திருமீயச்சூர் மேகநாதர் கோயில் திருத்தலம்.

கோபிக்கும் அன்னையின் கண்கொள்ளாக் காட்சி

 

மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் பேரளம் எனும் ஊருக்கு அருகே அமைந்துள்ளது திருமீயச்சூர் எனும் அழகிய சிற்றூர். இங்கே அருள்பாலிக்கும் லலிதாம்பிகை சமேத மேகநாத சுவாமி, தம்பதியரின் முரண்பாடுகளை களைய எளிய வழி கூறுகிறார். 



சோழர்காலத்திய இக்கோயில் சிற்பங்களில், ஷேத்திர புராணேஸ்வரர் - அம்பிகை சிற்பம் உலகப் புகழ் வாய்ந்தது. கோபம் கொண்டு திரும்பி நிற்கும் அம்பிகையை அன்பாய் தன் திருக்கரங்களால் தேற்றும் இறைவனின் அழகு கண்கொள்ளாக் காட்சி. ஒருபுறம் இருந்து பார்த்தால் கோபம் கொள்ளும் சிற்பமாய் தென்படுவதும், மறுபுறம் சென்று நேராய் நின்று பார்த்தால் புன்னகை ததும்பும் சிற்பமாய் விளங்குகின்றன

Image source


நமக்குள் ஆயிரம் வேறுபாடுகள் இருந்தாலும் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பேரருள் புரிவாயாக என அம்பிகையை பார்த்து இறைவன் கோருவதைப் போலவும், அதையொட்டி இருவரும் புன்னகையாய் அருள்புரிவதைப் போலவும் அமைந்துள்ள இச்சிற்பம், தமிழரின் கலைநுணுக்கத்தை பறைசாற்றுகின்றன. இதுவே, தம்பதியின் முரண்களைக் களைந்து இல்லறம் தழைக்கச் செய்யும் தத்துவமாய் ததும்பி நிற்கிறது. 


முக்கிய பரிகார ஸ்தலம்

 

அவ்வபோது குடும்பத்தில் ஏற்படும் முரண்பாடுகள், தொடரும் இல்லற சச்சரவுகள், கருத்து வேற்றுமையாலும், இதர பிரச்சனைகளாலும் பிரிந்திருக்கும் தம்பதியினருக்கு இத்திருக்கோயில் முக்கிய பரிகார ஸ்தலமாகும். கொடிய நோய்கள், கிரக தோஷங்களால் ஆயுள் குறைவு ஆகியவற்றுக்கும் இத்தலம் விமோசனம் அளிக்கிறது.
இறைவன், இறைவியின் கண்கொள்ளாக் காட்சியை கண்டு தரிசிப்பதோடு, மனதில் நிறுத்தி வழிபட்டால், முற்றிய மனமுறிவுகள் கூட நீங்கி, மனம் தெளிவடையும். மணமுறிவு என்பதே நம் சமூகத்தில் இல்லாமல் போகும்.

சொர்க்கம் என்பது விண்ணில் இல்லை, நல்லதொரு இல்லறத்தில்தான் அமைகிறது என்கிற தத்துவத்தையும், பெண்மையை மதித்தொழுகும் அவசியத்தையும் விளங்கச் செய்கிறது இக்கோயில்.

ஒவ்வொரு தம்பதியும் வாழ்வில் ஒருமுறையேனும் இத்திருக்கோயில் சென்று தரிசிக்குமாறு வேண்டுகிறேன்.

மயிலாடுதுறையில் இருந்து சுமார் 25 km தொலைவிலும், திருவாரூரில் இருந்து 22 km தொலைவிலும் அமைந்துள்ளது. காரைக்காலில் இருந்து சுமார் 20 km தொலைவிலும் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் பாதையில் உள்ளது.

அருள்மிகு மேகலாம்பிகை சமேத சகலபுவனேஸ்வரர் திருக்கோவில் (லலிதாம்பிகை கோயில்), திருமீயச்சூர் - 609 405, திருவாரூர் மாவட்டம். தொலைபேசி எண் : 94448 36526, 94446 98841.

 Other informative web-links


Shri Lalitha Sahashranama originated in Thirumeeyachur Temple, the verses and 1008 names of Ambal are given to Maha Muni Agasthiyar by Swamy Hayagrivar. Maha Muni Agasthiyar and Amma Lopamudra recited this at our Ambal's temple. Video source

Om Guruve Namaha... 

நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்