Friday, March 31, 2017

Sri Pamban Kumaragurudasa Swamigal

மனநலம் நல்கும் பாம்பன் ஸ்வாமிகள்!

 

Arulmigu Sri Pamaban Kumaragurudasa Swamigal (Picture credit)














நகரமயத்துக்கும் வேகமான வாழ்க்கைக்கும் உதாரணமாகிவிட்ட சென்னையில் கலியுக காமதேணுவாக மக்களுக்கு நல்லருள் பரப்புகிறது திருவான்மியூரில் உள்ள பாம்பன் ஸ்வாமிகள் ஜீவசமாதி.

1850-ம் ஆண்டு ராமேசுவரம் தீவில் உள்ள பாம்பன் பகுதியில் பிறந்த குமர குருதாச ஸ்வாமிகள் தமிழாலும், கந்தர் சஷ்டி கவசத்தாலும் ஈர்க்கப்பட்டார். எத்தனையோ தமிழ்ப் பாடல்களை பிற்காலத்தில் அவர் படைத்தாலும் அவர் இயற்றிய சண்முகக் கவசம் நீங்கா புகழ் பெற்றது.

தமிழின் மீதும், தமிழ் கடவுளின் மீது எல்லையில்லா ஈர்ப்பு கொண்டு அவர் மேற்கொண்ட தவத்தால், கலியுகத்தில் முருகனின் திருக்காட்சியைக் காணும் பெரும் பாக்கியத்தை பெற்றார். 1894-ம் ஆண்டு ராமநாதபுரத்துக்கு அருகே பிரப்பன்வலசை பகுதியில் அவர் மேற்கொண்ட அருந்தவத்தால் முருகனே நேரில் காட்சியளித்து அருள்பாலித்ததாக அவரது சீடர்கள் பதிவு செய்துள்ளனர்.

அருணகிரிநாதர் மீது கொண்ட பேரன்பால் அவரை ஞானகுருவாக ஏற்று பிற்காலத்தில் "உபய அருணகிரியார்" என போற்றப்பட்டார். அவரது வடமொழிப் புலமையையும், உபநிடதங்களை உடனுக்குடன் தமிழில் விவரிக்கும் பேராற்றலையும் தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் தனது நூல்களில் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அவரது கனவுகளில் முருகனே வந்து நல்வழிகாட்டி சைவப் பணியில் ஈடுபடுத்தியதாக அவரது சீடர்கள் கூறுகின்றனர். உடல்நலிவுற்று சென்னை பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, ஆங்கிலேயே டாக்டர்கள் கூட கைவிட்ட நிலையில், மயிலேறி வந்த மருகனால் உடல்வினைகள் நீங்கியதால் இன்றும், ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் "மயூர சேவன விழா" திருவான்மியூர் ஜீவ சமாதியில் கொண்டாடப்படுகிறது.

1929-ல் முக்தியடைந்த பாம்பன் ஸ்வாமிகள், திருவான்மியூரில் ஜீவசமாதியாக குடி கொண்டு அண்டியவர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

மனநலம் குன்றிய குழந்தைகள், மனப் பிழற்சி, தாளாத மன உளைச்சல், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அன்பர்கள், திருவான்மியூர் பாம்பன் ஜீவசமாதியில் பவுர்ணமி தினத்தில் இரவு முழுவதும் தங்கி வழிபட்டும், தியானம் செய்தும் பரிபூரண குணமடைந்து வருகின்றனர். பாம்பன் ஸ்வாமிகளின் அருளால் பூரண மனநலம் பெறுவது உறுதி.

Sri Pamban Swamigal, (Picture credit)

பித்ரு தோஷத்துக்கும், அஷ்டம குரு மற்றும் குருப் பார்வையின்மையால் வரும் பிரச்சினைகள், குரு பகவானின் அருட்கடாட்சத்தைப் பெற திருவான்மியூர் பாம்பன் ஸ்வாமிகள் ஜீவ சமாதியில் வியாழக்கிழமைதோறும் சென்று வழிபடுவது அவசியமாகும்.

வேகமான வாழ்க்கையில் அன்பையும் ஆன்மீகத்தையும் தொலைத்துவிட்டதாக ஏங்கும் அன்பர்கள் அனைவரும் திருவான்மியூர் பாம்பன் ஸ்வாமிகள் ஜீவசமாதி எனும் கலியுக காமதேணுவை இறுகபிடித்துக் கொள்வது நலம்.

  Velum Mayilum Thunai

 Om Guruve Namaha....

   

தேசத்துடன்
குபேரன் ஜோதிடர்