Friday, October 19, 2018

Koothanur Arulmigu Sri Saraswathi Ambal

நாவில் நிற்கும் கலைமகள் குடிகொண்ட இடம் கூத்தனூர்


Koothanur Arlmigu Annai Sri Gnana Saraswathi, Image source




கல்விக் கடவுளாக போற்றப்படும் கலைமகளான சரஸ்வதி அன்னைக்கு என தனியே கோயில் உள்ள ஒரே இடம் கூத்தனூர்தான்.  திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகே அமைந்துள்ளது இந்த எழில் மிகு கிராமம்.


Arulmigu Koothanur Ambal Maha Saraswathi, Image source

எட்டுத் திக்கும் கட்டியாண்ட சோழப் பேரரசின் அவைப் புலவராக நிகரற்று திகழ்ந்தவர் ஒட்டக் கூத்தர். "ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் ” என்பது வாய்மொழி வழக்கு. அந்த அளவுக்கு கலைமகளின் பெருங்கடாட்சத்துடன் புலவர் பேரரசன் என புகழப் பெற்றவர். ஒட்டக் கூத்தரின் இஷ்ட தெய்வமான கலைமகளுக்கு கோயில் கட்ட, இரண்டாம் ராஜ ராஜ சோழனால் வழங்கப்பட்ட இடம்தான் கூத்தனூர். ஒட்டக்கூத்தரை ஆட்கொண்ட அன்னை என்பதால், கூத்தனூர் என பெயர் பெற்றது.

மகாகவியான சுப்ரமணிய பாரதி, அடிக்கடி இக்கோயிலுக்கு வந்து கலைமகளை வழிபட்டதாக கூறுவர். அன்னையின் அருளால் பாரதம் போற்றும் மகாகவியானார் பாரதி. கல்வியும், சிந்தனையுமே ஒருவனை பண்படுத்தும் அலகுகள் என்பதை உணர்வதற்குக்கூட இயலாத காலகட்டத்தில் வாழ்கிறோம்.

கூத்தனூர் என்ற அழகிய சிற்றூரில் அமர்ந்து எல்லையில்லா பெருங்கருணையோடு குழந்தைகளுக்கு வித்யா வரம் தந்துவரும் கலைமகள் அன்னையை, அன்பர்கள் அனைவரும் குடும்பத்தினரோடும், தவறாமல் குழந்தைகளோடும் சென்று ஆண்டுக்கு ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டுகிறேன். குழந்தைகளின் கல்வியில் ஏற்படும் தோஷங்களைப் போக்க கூத்தனூர் சரஸ்வதி கோயில் வழிபாடு இன்றியமையாத பரிகாரமாகும்.

விலைபொருளாகிவிட்ட கல்வியை, விளைபொருளாக்கிக் கொள்ள கலைமகளின் கடாட்சம் அவசியம். அன்னையின் அருட்பார்வை நம் உள்ளத்தையும் வாழ்வையும் செழுமைப்படுத்தும் என்பது திண்ணம்.கல்வி, செல்வம், வீரம் வரிசையில் முதலிடம் பெறும் கல்வி அனைவருக்கும் கிட்டிட,எல்லோரும் எல்லாமும் பெற்றிட கலைமகளை உளமாற தரிசிப்போம்.

தலவரலாறு 

 

Arulmiguu Koothanur Sri Maha Saraswathi Ambal, Image source

 

சத்தியலோகத்தில் ஒரு முறை சரஸ்வதிக்கும், பிரம்மனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கல்விக்கு அரசியான தன்னால் தான் சத்தியலோகம் பெருமை அடைகிறது என்று சரஸ்வதியும், தன் படைப்புத்தொழிலால் தான் சத்தியலோகம் பெருமை அடைகிறது என்று பிரம்மனும் வாதிட்டனர். வாதம் முற்றி, ஒருவரையொருவர் சபித்துக்கொண்டனர்.

இதனால் பூலோகத்தில் சோழ நாட்டில் புண்ணிய கீர்த்தி, சோபனை என்ற தம்பதியினருக்கு பகுகாந்தன் என்ற பெயரில் மகனாகவும், சிரத்தை என்ற பெயரில் மகளாகவும் பிறந்தனர்.

அவர்களுக்கு திருமண வயது வந்ததும் பெற்றோர்கள் வரன் தேட தொடங்கினர். அப்போது இவர்கள் இருவருக்கும் தாங்கள் யார் என்பது நினைவுக்கு வந்தது. சகோதர நிலையில் உள்ள நீங்கள் திருமணம் செய்து கொண்டால் உலகம் பழிக்கும். இது இயலாத காரியம். பெற்றோருக்கு இந்த விஷயம் தெரிய வர அவர்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வு வேண்டி சிவபெருமானை பிரார்த்தனை செய்தனர். சிவபெருமான் அவர்கள் முன் தோன்றி சகோதர நிலையில் உள்ள நீங்கள் திருமணம் செய்து கொள்வது இயலாத காரியம் என்று கூறி, சரஸ்வதியிடம் நீ மட்டும் இங்கே தனியாக கோவில் கொண்டு பக்தர்களுக்கு கல்விச்செல்வத்தை வழங்குவாய் என்று கூறி அருள்பாலித்தார். அதன்படி சரஸ்வதி தேவி, கூத்தனூரில் தனியாக கோவில் கொண்டு, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கல்வி செல்வத்தை வாரி வழங்கி வருகிறார்.

 

 

அமைவிடம் 

Arulmigu Koothanur Sri Saraswathi Annai, Image source
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் பூந்தோட்டம் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள பஸ் நிலையத்தில் இறங்கினால் 5 நிமிட நடைபயணத்தில் கோவிலை அடையலாம். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து காரைக்காலுக்கு பூந்தோட்டம் வழியாக செல்லும் பஸ்சிலும் வரலாம்.

திருவாரூரில் இருந்து மயிலாடுதுறையில் செல்லும் பஸ்சில் ஏறி 25 கிலோ மீட்டர் பயணித்தால் கோவிலை சென்று அடையலாம். 

காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 9 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும். தொடர்புக்கு: 04366 273050 மற்றும் 238445.
Subramaniya Bharathiyar's song on Saraswathi Ambal, source

  

Om Guruve Namaha...

 

நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்