Thursday, November 2, 2017

Arulmigu Thiru Srikalahasteeswara Temple

திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோயில்


திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ! 


Arulmigu Appan Sri Thirukalahasteeshwar, Ammai Arulmigu Sri Ganaparasunambigai,  Image source
 

ராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நீண்டகாலம் தீராத பிரச்சினையில் சிக்கி திண்டாடுபவர்கள் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக வழிபடக் கூடிய ஆலயமாக இருப்பது ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் இருக்கும் காளஹஸ்தீஸ்வரர் கோயில் என்பது இந்து சமயத்தினரின் நம்பிக்கை.

தல வரலாறு

திருக்காளத்தி காளத்தீசுவரர் கோயில் கோபுரம்


சிவன் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்த அந்த பாம்பு பாதாளத்தில் இருந்து மாணிக்கங்களை எடுத்து வந்து சிவலிங்கத்திற்கு தினமும் பூஜை செய்தது. பாம்பு பூஜை செய்து முடித்த பின்னர் அங்கு வரும் யானை, மாணிக்கங்களை தனது துதிக்கையால் அப்புறப்படுத்திவிட்டு பூக்கள், தண்ணீர், வில்வ இலை கொண்டு சிவனை பூஜித்தது.

Bhaktha Kannappa Nayanar, Sri Kalahasthi Temple Story, Image source

தான் வைக்கும் மாணிக்கங்களை தள்ளிவிடுவது யார் என்பதை அறிய ஒரு நாள் அந்த பாம்பு பூஜைக்குப் பின்னரும் அங்கேயே காத்திருந்தது. வழக்கம் போல் வந்த யானை, மாணிக்கங்களை தள்ளிவிட்டு பூஜை செய்தது. கோபம் கொண்ட பாம்பு, யானையின் துதிக்கை வழியாக அதன் தலைக்குள் புகுந்து, யானை மூச்சு விட முடியாதபடி செய்தது. பரிதவித்த யானை துதிக்கையால் சிவலிங்கத்தை தொட்டு வழிபாடு செய்துவிட்டு, பாறையில் மோதி இறந்தது. யானையின் தலைக்குள் இருந்த பாம்பும் நசுங்கி இறந்தது.

இதேபோன்று, சிவன் மீது பக்தி கொண்டிருந்த சிலந்தி ஒன்றும் அதே சிவலிங்கத்தை வழிபட்டு வந்தது. தனது உடலில் இருந்து வரும் நூலினால் சிவனுக்கு கோவில் கோபுரம், பிரகாரம் கட்டி பூஜித்து வந்தது. காற்றில் நூல் அறுந்து போனாலும் மீண்டும் கட்டியது.

Arulmigu Appan Sri Kalahastheeswarar, Image source


ஒரு முறை சிலந்தி கட்டிய நூல் கோபுரத்தை எரிந்து சாம்பலாகும்படி செய்தார் சிவபெருமான். கோபம் கொண்ட சிலந்தி, எரிந்து கொண்டிருந்த தீபத்தை விழுங்க சென்றது. சிலந்தியின் பக்தியை கண்டு வியந்த சிவபெருமான், அதனிடம் என்ன வர வேண்டும் என்று கேட்டார். மீண்டும் பிறவாமை வேண்டும் என்று வேண்டிய அந்த சிலந்திக்கு முக்தி கொடுத்து தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார் சிவன். இதே போன்று, தன் மீது கொண்டிருந்த அபரிமித பக்தியால் இறந்து போன யானை, பாம்பு ஆகியவற்றுக்கும் முக்தி அளித்தார் சிவன்.

ஸ்ரீ காளத்தீசுவரர், ஸ்ரீ ஞானபிரசுனாம்பிகை அம்மன்


இந்த அற்புதங்கள் நிகழ்ந்த தலம் தான் ஸ்ரீகாளஹஸ்தி. இங்கு லிங்கமாக காட்சியளிக்கும் சிவனின் திருமேனியை கூர்ந்து கவனித்தால், கீழ் பாகத்தில் யானை தந்தங்கள், நடுவில் பாம்பு, பின்புறம் சிலந்தி ஆகியவற்றை காணலாம். இங்கு எழுந்தருளியுள்ள சிவன், காளஹஸ்தீஸ்வரர் என்றும், அம்மன் ஞானபிரசுனாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர்.

பெயர்க் காரணம்


சீகாளத்தில் என்ற சொல்லில், சீ என்பது சிலந்தியை குறிக்கிறது. காளத்தி என்பது காளம், அத்தி என இரு பெயர் பெறுகிறது. இதில் காளம் என்பது பாம்பினையும், அத்தி என்பது யானையையும் குறிக்கிறது. சிலந்தி, பாம்பு, யானை ஆகிய உயிர்கள் சிவலிங்கத்தை பூஜித்து முக்தி பெற்றதால் அவற்றின் பெயரால் இவ்வூர் சீகாளத்தி எனப் பெயர் பெற்றது என்கிறார்கள் சிலர்.

ஸ்ரீகாளஹஸ்தி எவ்வாறு உருவானது என்பதற்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது. சிவபெருமான் ஆணைப்படி பிரம்மன் கயிலாயத்தை படைத்த போது அதில் இருந்து ஒரு பகுதி பூமியில் தவறி விழுந்து விட்டது. அந்த இடமே சீகாளத்தி என்ற இப்போதைய ஸ்ரீகாளஹஸ்தி என்கிறார்கள் சிலர்.

கோயில் அமைப்பு


திருக்காளத்தி காளத்தீசுவரர் கோயில் வளாகம்

Sri Kalahasthi Temple on the banks of Swarnamukhi (Ponmuhali) river, Image source


கோவிலின் உள் பிரகாரத்தில் சிவனுக்கும், பார்வதிக்கும் தனி சன்னதிகள் உள்ளன. காசி விஸ்வநாதர், பால ஞானாம்பா, நந்தி, விநாயகர், சுப்பிரமணியர், அஷ்டோத்ரலிங்கம், சுயம்புநந்தி, வாயுலிங்கம், கண்ணப்பன், சகஸ்ரலிங்கம், சனிபகவான், துர்கா, 63 நாயன்மார்களுக்கு தனி சன்னதிகள் உண்டு.

ஞானபிரசுன்னாம்பிகை சன்னதியை கடந்து சண்டிகேஸ்வரர் சன்னதிக்கு சென்றால் அங்கிருந்து கண்ணப்ப நாயனார் மலை சிகரத்தை காணலாம்.

தென் கயிலாயம் என்று போற்றப்படும் ஸ்ரீகாளகஸ்தி, பஞ்சபூத தலங்களில் வாயு (காற்று) வுக்கு உரிய தலமாகும். இங்குள்ள லிங்கம் வாயு லிங்கமாகும். இன்றைக்கும் காற்றுப்புக முடியாத கர்ப்பக கிரகத்தில், சுவாமிக்கு ஏற்றி வைத்திருக்கும் அகல் தீபம் படிப்படியாக சுடர் விட்டு மேலெழுந்து அங்கும், இங்கும் அசைந்தாடுவது ஓர் அற்புத நிகழ்ச்சியாகும்.

பாதாள விநாயகர்


கோவிலின் வெளிப்பிரகாரத்தில் பாதாள கணபதி கோவில் உள்ளது. ஒரு சமயம் அகத்தியர் சிவபெருமானையும், விநாயகரையும் வழிபட மறந்தார். இதனால் விநாயகரின் கோபத்தால் ஸ்ரீகாளஹஸ்தியை ஒட்டி ஓடும் பொன்முகலி என்ற சொர்ணமுகி ஆறு வற்றிவிட்டது. தன் தவறை உணர்ந்த அகத்தியர் விநாயகரை பூஜை செய்து வழிபட்டு விநாயகரின் அருளுக்கு உரியவர் ஆனார் என இக்கோவில் தலபுராணம் கூறுகிறது.

காலப்போக்கில் விநாயகர் கோவில் இருந்த பகுதியை விட, அதை சுற்றியிருந்த பகுதிகள் எல்லாம் உயர்ந்து விட்டன. அதனால் விநாயகர் கோவில் பாதாளத்திற்கு போய் விட்டது. இதனால் இங்குள்ள விநாயகர், பாதாள கணபதி என்று அழைக்கப்படுகிறார். படிக்கட்டுகள் வழியே 20 அடி கீழே இறங்கிச் சென்று இந்த விநாயகரை வழிபட வேண்டும்.

தோஷங்கள் விலக பரிகார பூஜை


ஸ்ரீகாளஹஸ்தி, காளஹஸ்தீஸ்வரர் கோவில் ராகு மற்றும் கேது கிரகங்களின் பரிகார தலமாகவும் திகழ்கிறது. ராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நீண்டகாலம் தீராத பிரச்சினையில் சிக்கி திண்டாடுபவர்கள் இங்கு வந்து ராகு மற்றும் கேது சர்ப்பதோஷ நிவாரண பூஜை செய்து கொண்டால், பிரச்சினையில் இருந்து விடுபடுகின்றனர்.

 
Bhaktha Kannappa Nayanar, Image source

பயண வசதி 


ஆந்திர மாநிலத்தில் திருப்பதிக்கு கிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் சென்னை செல்லும் சாலையில் ஸ்ரீகாளஹஸ்தி அமைந்துள்ளது. சென்னையிலிருந்து நேரடியாக இந்த ஊருக்கு பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது.

Interesting Web Links


Om Guruve Namaha...

  
நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்

Sunday, September 10, 2017

Thripattur Arulmigu Sri Brahmapureeshwarar Temple

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், சிறுகனூர், திருப்பட்டூர், திருச்சி

 

 தலைஎழுத்தை மாற்றும் சிவன் கோவில்

 

Arulmigu Sri Brahma

ஒருவர் தலையில் எழுதியிருந்தால் மட்டுமே  இத்தலத்தை தரிசிக்க முடியும் என்று நம்பப்படும் தலம்; முருகன் வணங்கிய சிவன் திருத்தலம்.

பிரம்மன் வழிபட்ட ஷோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது.

பிரம்ம சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்த தலம்.

சிவன் கோயிலாக இருந்தாலும் இங்கு பிரம்மனுக்கு பிரம்மாண்டமான சிலையுடன், தனி சன்னதி உள்ளது.

காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார்.

சிவ பக்தியுடன் வாழ்ந்து வந்த வியாக்ரபாதர், சிவனாரை நோக்கி இந்த தலத்தில் தவம் செய்தார்.

இத்தலத்தில் உள்ள தீர்த்தக்குளத்து நீரை, எவர் கையில் எடுத்தாலும் அவர்களுக்கு கங்கையில் நீராடிய பலனும் கிடைக்கும்.

இத்தலத்தில் 3001 அந்தனர்கள் வேதங்களை அனுதினமும் பாராயணம் செய்ததால் அதில் உண்டான அதிர்வலைகள் அங்கிங்கெனாதபடி எங்குமாக பரவிக் கிடப்பதால் திருப்பிடவூர் எனப்பெயர்பெற்றது. திருப்பிடவூர் என்பதே காலப்போக்கில் திருப்பட்டூராக மாறியது.

Arulmigu Sri Brhama, Image source

இது காசிக்கு நிகரான தலம் மட்டுமல்ல. திருக்கைலாயத்திற்கு நிகரான தலமும் ஆகும். இத்தலத்தில் ஸ்ரீமந் நாராயணரை வணங்கி தொழுததால் ஆதிசேஷன் அடுத்த கணம் பதஞ்சலி முனிவராக மாறினார்.

கர்வத்தை ஒழிப்பவர்கள் மனதில் இறைவன் உறைவதும், அவனே இறைவனாக மாறிப்போவதும் இத்தலத்தில் நிகழும்.

திருக்கயிலாய ஞான உலா எனும் நூல் இத்தலத்தில் அரங்கேறியது.
சிவ பெருமான், தன் அடியவர்கள் பலரையும் இந்த தலத்திற்கு அழைத்து வந்து திருவிளையாடலை நிகழ்த்தி இருக்கிறார்.

சேர மன்னன் நாயானாரும், சுந்தரரும் நெகிழ்ந்து வணங்கிப் பேறு பெற்ற அற்புதமான இடம் இதுவாகும். மாசாத்தனார் ஓலை நறுக்குகளுடன் காட்சி தரும் விக்கிரகத் திருமேனியை கோவிலின் மூலமூர்த்தமாக இன்றைக்கும் இங்கு தரிசிக்கலாம்.

சிவபெருமான் பிரம்மனின் ஒரு தலையை கிள்ளி எறிந்த தலம் திருவையாறு அருகில் உள்ள திருக்கண்டியூர் தலத்திலாகும். அந்த பிரம்மன் பரிகாரம் தேடி கொண்டது திருப்பட்டூராகும்.

பிரம்மன் உருவாக்கிய பிரம்ம தீர்த்தக் குளம், சிவலிங்கச் சந்நிதிகளும் இங்கு அமைந்துள்ளன. இங்கு வழிபட்டால் 12 சிவாலயங்களுக்கு சென்று வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மாதாவாக பிரம்ம சம்பத்கவுரி கனிவு ததும்ப கருணை பொங்கக் காட்சி தருகிறாள். இவளுக்கு செவ்வாய், வெள்ளி கிழமைகளில் புடவை சார்த்தி வேண்டிக் கொண்டால் தடைப்பட்ட திருமணம் இனிதே நடைபெறும்.

பிரதோஷ நாளில் இங்கு ஒரே நேரத்தில் நந்திக்குச் செய்யப்படுகிற பூஜையையும், நரசிம்ம மூர்த்தியையும் தரிசிக்கலாம்.

ஏழேழு ஜென்ம பாவங்களை நீக்கி பஞ்சபூதங்களாக உறைந்து இத்தலத்து ஈசன் நம்மை காக்கிறார்.

பிரம்மாவை வணங்கும் போதே குரு தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.
குரு பகவானுக்கு அதி தேவதை யான பிரம்மா தனி சந்நிதியுடன் திகழும் தலம் இதுவாகும்.

தல வரலாறு


பிரம்மன் இவ்வுலகத்தை படைக்கும் ஆற்றலை சிவனிடமிருந்து பெற்றிருந்தார். தன்னைப் போலவே, பிரம்மனுக்கும் சம அந்தஸ்து கொடுக்கும் வகையில் ஐந்து தலைகளை அவருக்கு கொடுத்தார். படைப்புத் தொழிலில் அனுபவம் பெற்ற பிரம்மன், தன்னையும், சிவனையும் ஒன்றாகக் கருதி ஆணவம் கொண்டார். 


Temple Preist Bhaskar breifly explaining in Tamil about the temple, Video source

அதனால் ஈசனை மதிக்காமல் இருந்தார்.  ஈசன் பிரம்மனுடைய  அகங்காரத்தை அழித்து அவருக்கு பாடம் புகட்ட விரும்பிய சிவன், "ஐந்து தலை இருப்பதால் தானே அஞ்சுதல் இல்லாமல் இருக்கிறாய்,'' எனக்கூறி, ஒரு தலையைக் கொய்து விட்டார்.

படைப்புத்தொழிலும் பறி போனது. நான்முகனான பிரம்மா, இறைவனிடம் தனது தவறுக்காக சாப விமோசனம் கேட்டார்.

பூலோகத்தில் திருப்பட்டூர் என்ற தலத்தில் குடிகொண்டிருக்கும் தன்னை 12 லிங்க வடிவில் (துவாதசலிங்கம்)  வணங்கி, சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்தார்.  மேலும், பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி, மீண்டும் படைப்புத்தொழிலை அருள்வதாகக் கூறினார். பிரம்மனும், இங்கு வந்து துவாதச லிங்க வழிபாடு செய்தார்.

பிரம்மனின் வழிபாட்டில் மகிழ்ந்த ஈசன் பிரம்மனின் படைப்பாற்றலையும், திரும்ப வழங்கி கூடுதலாக ஒரு வரம் வழங்கினார். பிரம்மனே உன்னுடைய வழிபாட்டில் மகிழ்ந்த யாம் எல்லோருடைய தலையெழுத்தை நிர்ணயிக்கும் உன்னுடைய தலையெழுத்தை மாற்றியது போல் இங்கு வந்து உன்னை வழிபாடு செய்பவர்களுக்கு மீண்டும் ஒரு முறை அவர்களுடைய தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக என்று வரமளித்தார். 

"விதியிருப்பின் விதி கூட்டி அருள்க"


என்றும் வரம் வழங்கினார்.

 

இந்த வரத்திற்கு இரு பொருள் உண்டு


விதியிருப்பின்” அதாவது இத்தலத்தில் வந்து யாருக்கெல்லாம் தலைவிதி மங்களகரமாக மாற வேண்டும் என்ற விதி உள்ளதோ அவர்களே உன்னை வந்து பார்த்து மாற்றிக் கொள்ள இயலும். 

Arulmigu Sri Brahama, Image source
விதியிருப்பின் விதி கூட்டி அருள்க” யாருடைய தலையெழுத்தை யெல்லாம் விதி கூட்டி மங்களகரமாக அருள முடியுமோ அவர் களுக்கெல்லாம் அருள்க என்பதாகும்.

பிரம்மனுக்கு வரம் அளித்த இத்தலத்து இறைவன் பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரைப் பெற்றார். பிரம்மனுக்கு தேஜஸை வழங்கியதால், அன்னை பிரம்ம சம்பத் கௌரி என அழைக்கபடலானாள்.

பொது தகவல்


இது தஞ்சாவூர் கோயிலுக்கும் முற்பட்டதாக தெரிய வருகிறது.
இங்குள்ள நந்தியை தடவிக் கொடுத்தால், நிஜ காளையை தடவிக் கொடுத்த உணர்வு ஏற்படுகிறது, பிரதோஷ நாளில் இந்த நந்தியை மக்கள் மொய்ப்பர்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பார்கள். நம் வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களுக்கும், நல்லது கெட்டதுகளுக்கும், லாப நஷ்டங்களுக்கும் நாமே காரணம்! நம் சிந்தனையிலும் செயலிலும் நல்லது இருப்பின், நாம் சந்திக்கிற எல்லா விஷயங்களும் நல்லனவாகவே இருக்கும். வாழ்க்கையில் ஒரேயோரு நல்ல விஷயம் நடந்துவிட்டால், பிறகு அடுத்தடுத்து நடக்கிற எல்லாக் காரியங்களும் நல்லனவாகவே அமையும்!

எண்ணம் போல் வாழ்க்கை என்பார்கள். நம் எண்ணம் போல் நம் வாழ்க்கை அமைவதற்கு, வாழ்வில் நல்லதொரு திருப்பம் நிகழ்வதற்கு, பேரருள் புரியும் திருத்தலம் தான் திருப்பட்டூர்!

"திருப்பட்டூருக்கு வந்தால் திருப்பம் ஏற்படும்" என்றும், திருப்பதிக்கு நிகரான புகழுடன் பிராபல்யமாகும் திருத்தலம் என்றும் ஓலைச்சுவடிகள் தெரிவிக்கிற அற்புதத் தலத்துக்கு- ஸ்ரீகாசிவிஸ்வநாதரின் கோயிலுக்கு வந்து, ஸ்ரீவியாக்ரபாதர் உருவாக்கிய திருக்குளத்தின் தண்ணீரைச் சிரசில் தெளித்துக்கொண்டு, அந்த ஆலயத்தின் ஸ்ரீவிசாலாட்சி அம்பாளையும் ஸ்ரீகாசிவிஸ்வநாதரையும் தரிசித்துப் பூரிக்கின்றனர்.

Image source

அதையடுத்து, அங்கேயுள்ள ஸ்ரீவியாக்ரபாதரின் திருச்சமாதிக்கு அருகில் ஒரு பத்து நிமிடம் கண் மூடி அமர்ந்து, அந்த மகரிஷியின் நல்லதொரு அதிர்வை உணர்ந்து சிலிர்க்கின்றனர். பிறகு, ஸ்ரீபிரம்ம சம்பத் கௌரி சமேத ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்குச் சென்று, அங்கே ஸ்ரீபிரம்மா வணங்கிய பல தலங்களின் மூர்த்தங்களையும் தனிச்சந்நிதியில் அருளும் ஸ்ரீபிரம்மாவையும் தரிசித்து மனமுருகப் பிரார்த் திக்கின்றனர். அங்கேயுள்ள பதஞ்சலி முனிவரின் திருச்சமாதிக்கு அருகிலும் கண் மூடி அமர்ந்து பிரார்த்தித்து, அங்கேயுள்ள அதிர்வை உணர்ந்து சிலிர்த்த வாசக அன்பர்கள் ஏராளம்!  

அதற்கு முன்னதாக, சிவாச்சார்யர்களுக்கு அருளும் திருத்தலம் இது என்பதை முன்னரே பார்த்தோம் அல்லவா?! "ஆகமச் செல்வர்களுக்கு அருளும் இறைவனே!" என்று இந்தத் தலத்து இறைவனைப் போற்றிப் புகழ்ந்துள்ளனர் என்றும், ஆகமங்களைக் கட்டிக் காக்கிற, ஆலயங்களில் உரிய பூஜைகளைச் செய்கிற ஆசார்யர்கள் எனப்படும் அர்ச்சகர்களுக்கு அருளக்கூடிய ஒப்பற்ற தலம் என்றும் பார்த்தது நினைவிருக்கிறதுதானே?

இந்தத் தலத்துக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. பிரம்மோபதேசம் என்றும் யக்ஞோப வீதம் என்றும் சொல்லப்படும் உபநயனம்... அதாவது பூணூல் கல்யாணம் எனும் சடங்கை, இந்தத் தலத்தில் செய்வது விசேஷம் என்கிறார்கள், ஆசார்யப் பெருமக்கள்!

ஆகமச் செல்வர்கள் எனப்படும் அர்ச்சகர் களும் மற்ற அந்தணப் பெருமக்களும் அவர்கள் தம் குழந்தைகளுக்கு சிறுவயதில் உபநயனம் செய்து வைப்பார்கள். அந்த உபநயனத்தை, பிரம்மோபதேச வைபவத்தை ஸ்ரீபிரம்மதேவன் குடிகொண்டிருக்கும் இந்தத் திருவிடத்தில் நடத்தினால், அந்தக் குழந்தை பின்னாளில் கல்வியிலும் ஞானத்திலும் சிறந்து விளங்குவான் என்பது ஐதீகம்!
கிரகிக்கும் திறனும் முகத்தில் தேஜஸும் கொண்டு, கல்வியில் சிறந்து விளங்கி, ஞானத்துடன் நம் பையன் திகழ வேண்டும் என்பதுதானே ஒவ்வொரு பெற்றோரின் நினைப்பும் கவலையும்?! திருப்பட்டூருக்கு வந்து, ஸ்ரீவியாக்ரபாதர் உருவாக் கிய திருக்குளத்து நீரைத் தெளித்துக்கொண்டு, இரண்டு ஆலயங்களையும் வழிபட்டுப் பிரார்த்தித்தாலே... பித்ருக்களாகிய முன்னோரின் ஆசியுடன் குருவருளும் திருவருளும் கிடைக் கப் பெற்று, நம் சந்ததி சிறக்கும் என்பது ஆசார்யர்களின் வாக்கு! அதன்படி, மாணவர்கள் இங்கு வந்து வழிபட்டாலே சர்வ நலனும் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள். ஆசார்ய புருஷர்களும் அந்தணர் களும் அவர்களின் மகன்களுக்கு இங்கு வந்து உபநயனம் செய்து வைத்தால்... இன்னும் பொலிவோடும் வலுவோடும் திகழ்வார்கள் என்பது உறுதி!

எத்தனையோ மகரிஷிகளின் பாதம் பட்ட பூமி இது. மன்னர்கள் பலரும் திருப்பணிகள் செய்து, நிவந்தங்கள் அளித்து ஆராதித்த ஸ்தலம் இது! "தில்லை மூவாயிரம் திருப்பிடவூர் மூவாயிரத்து ஒன்று" என்கிற சொலவடைக்கு ஏற்ப, இங்கே ஒருகாலத்தில் வேத கோஷங்கள் எப்போதும் ஓங்கி ஒலித்து,  அதிர்வலைகளைப் பரப்பிய இடம் என்று பெருமைகள் பல கொண்ட திருப்பட்டூர்...

 

குரு பரிகார தலம்


அட்சமாலை மற்றும் கமண்டலத்துடன் பிரம்மா இங்கு இருக்கிறார்.
குருபகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால், குரு தோஷ நிவர்த்திக்காக வியாழக்கிழமைகளில் விசேஷ பூஜை நடக்கிறது.

மேலும், திங்கள் கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் ஜென்மநட்சத்திர நாட்களில் பக்தர்கள் இவரை வணங்குவது விசேஷ பலன் தரும். குருபெயர்ச்சியன்று பிரம்மாவிற்கு பரிகார யாகபூஜை நடக்கும்.

குழந்தைகளுக்காக பைரவர் வழிபாடு

 

Thirupattur Arulmigu Sri Kala Bairavar, Image source

சில குழந்தைகள் இரவு வேளையில் தூங்காமல், தொடர்ந்து அழுது கொண்டிருக்கும். இவ்வாறு குழந்தைகள் அழாமல் இருக்கவும், அவர்கள் நிம்மதியாக தூங்கவும் இங்குள்ள கால பைரவரை வழிபடுகின்றனர்.

அர்த்தஜாமத்தில் இவரது சன்னதியில் சாவி வைத்து பூஜை நடக்கும். இவ்வேளையில் தரப்படும் விபூதியைப் பெற்றுச்சென்று குழந்தைக்கு கொடுக்கின்றனர். இவ்வாறு செய்வதால் குழந்தைக்கு பைரவர் காவலாக இருப்பார் என்பது நம்பிக்கை.


ஞானஉலா அரங்கேற்றம்


சுந்தரருடன், சேரமான் கயிலாயம் சென்றபோது, சிவனை பெண்ணாக உருவகப்படுத்தி சிற்றிலக்கியம் இயற்றினார். அதை ஐயனார் இத்தலத்தில் அரங்கேற்றம் செய்தார்.  இவர், இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் "ஞானஉலா அரங்கேற்றிய ஐயனார்' என்ற பெயரில் அருளுகிறார்.  

ஆடி சுவாதியில் "திருக்கயிலை ஞானஉலா' விழாவன்று சுந்தரருக்கும், சேரமானுக்கும் பூஜை நடக்கும். அன்று, சேரமான் கையில் ஞானஉலா சுவடி வைத்து, கயிலாயத்தில் அரங்கேற்றம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும்.

ஏழாம் தேதி பிறந்தவரா?


ராஜகோபுரத்தில் இருந்து 7 நிலைகளைக் கடந்து, 300 அடி தூரத்தில் பிரம்மபுரீஸ்வரர் இருக்கிறார். ஆனாலும், சுவாமி சன்னதிக்குள் சூரிய வெளிச்சம் இருக்கும்படியாக, கோயில் கட்டப்பட்டுள்ளது.

சூரியனுக்குரிய ரதம் ஏழு குதிரைகள் பூட்டியது. இதன் மீது வரும் சூரியன், ஏழு நிலைகளையும் கடந்து, தினமும் பிரம்மபுரீஸ்வரரை தரிசிப்பதாக ஐதீகம்.
பங்குனியில் மூன்று நாட்கள் காலையில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும். ஏழு நிமிடங்கள் இந்த ஒளி இருக்கும்.

ஜாதகத்தில் ஒருவரது ஏழாம் இடத்தைப் பொறுத்தே மனைவி, நண்பர்கள் அமைவர்.  இது தொடர்பான தோஷ நிவர்த்திக்கு இங்கு வழிபடுகின்றனர். ஏழாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தோருக்கான பரிகார தலமாகவும் இக்கோயில் உள்ளது.
  

 

பிரார்த்தனை

Arulmigu Sri Brahma, Image source

திருமணத்தடை, பிரிந்த தம்பதிகள் சேருதல், தொழில், வியாபார, பணி விருத்திக்காக பிரம்மனிடம் வேண்டலாம். மிக முக்கியமான பிரார்த்தனை புத்திரப்பேறு வேண்டுதல் தான். ஏனெனில், பிரம்மன் தானே படைத்தாக வேண்டும். அவ்வகையில் இது மிகச்சிறந்த புத்திரப்பேறுக்கான பிரார்த்தனை ஸ்தலம்.

 

நேர்த்திக்கடன்


சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். 
 

 தலபெருமை

 

கோவில் அமைப்பு


இவ்வாலயம் ஐந்து  நிலைகள் கொண்ட இராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி கம்பீரமாக காட்சியளிக்கிறது.

நாம் உள்ளே நுழைந்ததும் கொடிமரம். அதனைத் தொடர்ந்து நந்தியெம்பெருமான் ருத்ராட்ச பந்தலின் கீழ் காட்சியளிக்கிறார். இம் மண்டபத்திற்கு பெயர் வேத மண்டபம்.

அதனைத் தொடர்ந்து உள் பிரகாரம் சென்றால் நாத மண்டபம்.   இம்மண்டபத்தில் சப்தஸ்வரத்தூண்கள் அமையப்பெற்றுள்ளது. இம்மண்டபத்தினைக் கடந்து உள்ளே சென்றால் துவார பாலகர்களை வணங்கி ஈசன் கருணைக் கடலான பிரம்மனுக்கு அருள் புரிந்த பிரம்மபுரீஸ்வரரைக் காணலாம்.


Arulmigu Sri Appan Brahamapureeshwarar, Image source

ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர்க்கு கிழக்கு நோக்கிய சன்னதி. சுயம்பு மூர்த்தி. அழகிய தோற்றம். மேலே தாரா பாத்திரம், நாகாபரணத்துடன் கூடிய சதுர ஆவுடையார் கூடிய திருமேனி. ஈசன் ஸ்ரீ பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி அருள்புரிந்ததால் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆனார்.

நாத மண்டபத்தின் தென்புறம் சென்றால் மிகப் பெரிய கிழக்கு நோக்கிய ஸ்ரீ பிரம்மா சன்னதி. பிரம்மனுக்கு கோவில்கள் இல்லை என்பது பொதுவான கருத்து. ஆனால் பிரம்மன் இல்லாத சிவ ஆலயம் இல்லை என்பது தான் உண்மை. எல்லா சிவ ஆலயத் திலும், ஈசனின் இடபுறத்தில் அபிஷேக தீர்த்தம் வரும் வழியில் கோஷ்டமூர்த்தியாக இருந்து வருகிறார்.

ஆனால் திருபட்டூரில் மட்டுமே மிகப் பிரமாண்ட மான அதுவும் தலையெழுத்தை மங்களகரமாக மாற்றும் சக்தியுடன் தனி சன்னதியுடன் காட்சியளிக்கிறார். 

பதஞ்சலி முனிவர் பிரம்மன் சன்னதிக்கு தென்புறம் உள்ளார். இவர் யோக சூத்திரம் அருளிய பதஞ்சலியாவார். இவர் நித்ய கைங்கர்யாள் என்று அழைக்கப்படுபவர். தினமும் இவர் இத்தலத்து ஈசனை வணங்கி இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு யோகமாகிய ஞானத்தை வழங்கி மன நிம்மதி அளித்து அருள்புரிந்து வருகிறார்.

சப்த மாதாக்கள் பதஞ்சலி முனிவர் சன்னதியின் அருகில் உள்ளது. தட்சிணா மூர்த்தி பிரம்மன் சன்னதிக்கு அருகில் வடபுறம் உள்ளது.
மகாவிஷ்ணு ஈசனின் நேர் மேற்கில் கோஷ்டத்தில் உள்ளது.

முருகன் வள்ளி, தெய்வானை ஸ்ரீ பிரம்மன் சன்னதியின் பின்புறம் சற்று தள்ளி உள்ளது. முருகன் வள்ளி தெய்வானையுடன் கூடிய தனித்துவமான சன்னதி. முருகன் இடபாக மயிலில் வாகன மூர்த்தியாக உள்ளார்.

சுதை சிற்பத்துடன் ஒரு கஜலட்சுமியும், கல்சிலா ரூபமாக ஒன்றும் உள்ளது. விஷ்ணு துர்க்கை, சண்டிகேஸ்வரர் சன்னதிக்கு அருகில் உள்ளது. இந்த சன்னதி கொடிமரத்தின் வடபுறம் ஸ்ரீ பிரம்மசம்பத் கௌரி தனிக்கோவிலாக அமைந்துள்ளது. ஸ்ரீ பிரம்ம தேவன் வழிபட்ட அம்பிகை, பிரம்மனுடைய சம்பத்தாகிய தேஜசை அம்பிகை திரும்ப வழங்கியதால் பிரம்மசம்பத் கௌரி என்று வழங்கப்படுகிறது.

 

வித்தியாசமான அமைப்பு

 

 குருர் பிரஹ்மா;
குருர் விஷ்ணு; குருர் தேவோ மகேச்வர;
குரு ஸாட்ஷாத் பர ப்ரஹ்மை
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ

என்ற குருமந்திரப்படி அமைந்த கோயில் இது. Temple map - brahmatemple.org.in

கோயிலை வலம்வரும் போது, சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி (குரு), அடுத்து அருகில் தனிசன்னதியிலுள்ள பிரம்மா, அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு, அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் (மகேஸ்வரர்) என வரிசையாகத் தரிசிக்கலாம். இந்த அமைப்பு மிக விசேஷமானது.


முருகன் வணங்கிய சிவன்


முருகப்பெருமான், அசுரர்களை அழிக்கச் செல்லும்முன் இத்தலத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து வணங்கி, அதன்பின் படை திரட்டிச் சென்றாராம். இதனால் "திருப்படையூர்' எனப்பட்ட தலம் "திருப்பட்டூர்' என மருவியதாகச் சொல்வர். முருகன் வழிபட்ட சிவன் கந்தபுரீஸ்வரர் என்ற பெயரில் இங்கிருக்கிறார்.

எல்லாமே மஞ்சள் நிறம்


பிரம்மா மங்கலம் தந்து வாழ்க்கையை சிறக்கச்செய்பவர் என்பதால், பூஜையின்போது இவருக்கு மஞ்சள் காப்பிட்டு, புளியோதரை படைத்து, மஞ்சள் பிரசாதம் தருகின்றனர். மற்ற சன்னதிகளிலும் மங்கல சின்னமாகிய மஞ்சள் நிற வஸ்திரங்களையே பயன்படுத்துகின்றனர்.

Arulmigu Sri Brahma, Image source
பிரம்மன் வழிபட்ட பழமலைநாதர், கந்தபுரீஸ்வரர், பாதாள ஈஸ்வரர், தாயுமானவர், மண்டூகநாதர், ஏகாம்பரேஸ்வரர், அருணாசலேஸ்வரர், கைலாசநாதர், ஜம்புகேஸ்வரர், காளத்தீஸ்வரர், சப்தரிஷீஸ்வரர், தூயமாமணீஸ்வரர் ஆகிய லிங்கங்கள், சிவன் சன்னதி எதிரிலுள்ள நந்தி உட்பட பெரும்பாலான பரிவார மூர்த்திகளுக்கும் மஞ்சள் வஸ்திரமே அணிவித்து பூஜிக்கின்றனர்.

பிரம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் வியாழக்கிழமைகளில் காணப்படுகிறார்.  குருவுக்கு அதிதேவதை பிரம்மா. எனவே, வியாழன் இங்கு விசேஷம். யாருக்கு தலையெழுத்து மாற வேண்டும் என்ற விதி உள்ளதோ, அவர்களே இக்கோயிலில் பிரம்மனின் பார்வையில் படுவார்கள் என்பது ஐதீகம்.

அதுபோல், தலையெழுத்து மாற தகுதியுள்ளவர்கள், குறைந்த பாவக் கணக்கில் இருப்பவர்கள், பக்திமான்களின் தலைவிதி மாற்றப்பட்டு விடுகிறது.
உதாரணமாக நோய் தாக்க வேண்டும் என்ற விதி இருந்தால் அது மாறிப் போகிறது. ஆபரேஷன் செய்ய வேண்டும் என்ற விதியுள்ள கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆகும். விரயச் செலவுகள் தடுக்கப்படும். பெயிலாகிக் கொண்டிருக்கும் மாணவன் நன்றாக படிக்க ஆரம்பித்து உயர்நிலைக்குச் செல்வான். நியாயமற்ற கோரிக்கைகளை பிரம்மன் கவனிப்பதில்லை என்பதுடன், மேலும் நமது நிலையை மோசமாக்கி விடுவார்.


நரசிம்மர் மண்டபம்


நரசிம்மரின் லீலைகளை விளக்கும் வகையில் ஒரு மண்டபத்தில் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், துரோபாவம் என்ற வகையில் நரசிம்மர் அவதாரமானது, இரண்யனுக்கு நல்லொழுக்கம் போதித்தது, அவன் கேட்காததால் சம்ஹாரம் செய்தது, பிரகலாதனுக்கு அருள் செய்தது ஆகிய காட்சிகள் சிற்பங்களாக எழிலுற வடிக்கப்பட்டுள்ளன.

நாத மண்டபத்தில் ராவணன், அகந்தையினால் மேருமலையை சிவ, பார்வதியுடன் சேர்ந்து தூக்குவது போலவும், அது முடியாமல் போகவே சாமகானம் இசைத்து சிவனை வசப்படுத்தும் முயற்சியில் இம்மண்டபத்தில் இசைத்தூண்கள் அமைந்ததாகவும் கூறப்படுகிறது.

பிரம்மன் வழிபட்ட சோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது. இந்த மண்டபத்தின் உச்சி மரத்தால் ஆனது.

எலும்பு நோய்க்கு பூஜை


பதஞ்சலி மகரிஷி ராமேஸ்வரம் உட்பட 10 தலங்களில் ஐக்கியமானதாக சொல்லப்படுகிறது. அதில் இத்தலமும் ஒன்று. இவர் ஐக்கியமான இடத்தில் ஒரு லிங்கமும், ஓவியமும் உள்ளது. அமாவாசையன்று இந்த லிங்கத்திற்கு, தயிர் சாதம் படைத்து பூஜை நடக்கும்.

வைகாசி சதயத்தன்று இவரது குருபூஜை நடக்கிறது. சித்தர்பாடலில் இத்தலம் "பதஞ்சலி பிடவூர்'எனக் கூறப்பட்டுள்ளது.

மனஅமைதி கிடைக்க, எலும்பு தொடர்பான நோய் நீங்க, கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெற, குருவருள் கிடைக்க திங்கள், வியாழக்கிழமைகளில் இவரை வழிபடுகின்றனர்.


 பதஞ்சலியின் ஜீவசமாதி

 

Arulmigu Sri Pathanjai Munivar

Arulmigu Sri Pathanjali Munivar, Image source

ஜோதிடக்கலையின் தந்தையும், பாம்பு உடலைக் கொண்டவருமான பதஞ்சலி முனிவர் பத்து இடங்களில் ஜீவசமாதி அடைந்ததாக ஒரு தகவல் உண்டு. அதில் இத்தலமும் ஒன்று. பதஞ்சலி முனிவரின் சமாதி இக்கோயிலுக்குள் இருக்கிறது. அவர் யோகசூத்ரம் என்ற நூலை எழுதியவர். முக்தியடைந்தாலும் கூட இன்றும் உயிருடன் இருந்து அவர் அருள்பாலிக்கிறார்.

வேதங்களை ஈசன் அம்பிகையிடமும், அம்பிகை பிரம்மாவிடமும், பிரம்மா நந்தியிடமும், நந்தி தேவர் ரிஷிகளிடமும் சொன்னதாக காஞ்சிப்பெரியவர் சொல்வார். அது இங்கு தான் நிகழ்ந்திருக்குமோ என எண்ண வேண்டியுள்ளது. ஏனெனில் இங்கு பிரம்மபுரீஸ்வரர், பிரம்மநாயகி, பிரம்மா, பிரம்மாண்ட நந்தி, பதஞ்சலி ரிஷி ஆகியோர் உள்ளனர். இவ்வகையில் இது மிக விசேஷமான கோயில்.
Brahma's 12 Lingam worship, Image source

பிரம்மன் வழிபட்ட 12 லிங்கங்களும் இங்கு உள்ளன. எனவே ஜோதிர்லிங்கங்களை தரிசித்த பலன் இங்கு சென்றாலே கிடைத்து விடுகிறது.
தெற்கு நோக்கி இருக்க வேண்டிய காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார்.

பிரம்மனுக்கு 36 தீபம் (27 நட்சத்திரம், 9 கிரகம்) ஏற்றி, 108 புளியோதரை உருண்டைகளை படைத்து வழிபடுவது சிறந்தது. ஒன்பது முறை பிரம்மனை வலம் வர வேண்டும்.


சிறப்பம்சம்

 

அதிசயத்தின் அடிப்படையில்

 

  • பிரம்மன் வழிபட்ட ஷோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது, பிரம்ம சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்த தலம்.

  • சிவன் கோயிலாக இருந்தாலும் இங்கு பிரம்மனுக்கு பிரம்மாண்டமான சிலையுடன், தனி சன்னதி உள்ளது. இத்தலத்துக்கு வந்து பிரம்மாவின் திருச்சந்நிதியில் ஜாதகத்தை வைத்து மனதாரப் பிரார்த்திக்கும் பக்தர்கள், பிரார்த்தனை நிறைவேறியதும் வஸ்திரம் சார்த்தி நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.

  • 11 வியாழக்கிழமை தவறாமல் இங்கு வந்து தியானம் செய்தால் மன அமைதி கிடைக்கும் என்கிறார் இங்கு வரும் பக்தர் ஒருவர். 

  • வெள்ளைத் தாமரை சார்த்தி பிரம்மாவை வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கும் அதே போல் நீங்கள் பிறந்த நட்சத்திர நாளில் இத்தலத்தில் வழிபட்டால் புண்ணியம் நிச்சயம் சேரும்.

  • ஆடி சுவாதி நட்சத்திர நாளில், திருப்பட்டூர் வந்து மூன்று கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்யுங்கள். அப்படி தரிசித்த பலனை, அடுத்தடுத்த நாளிலேயே உணர்வீர்கள்.

Arulmigu Appan Sri Brahmapureeswarar, Ammai Arulmigu Sri Brahma Sambhat Gowri, Arulmigu Sri Bhrama Image source


மூலவர்: பிரம்மபுரீஸ்வரர் 
அம்மன்/தாயார்:  பிரம்மநாயகி (பிரம்ம சம்பத்கவுரி)
தல விருட்சம்:  மகிழமரம்
தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம்
ஆகமம்/பூஜை: காரண ஆகமம்
பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்: திருப்பிடவூர், திருப்படையூர்
ஊர்: சிறுகனூர், திருப்பட்டூர்


போன்: +91 431 2909 599 (தொடர்பு நேரம்: காலை 9.30 am - மாலை 6  pm மணி)

 

திருவிழா

    
பங்குனி மாதத்தில் பத்துநாள் விழா நடக்கும்.


இருப்பிடம்


திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் செல்லும் பேருந்துகளில் சென்று 30 கி.மீ., தொலைவிலுள்ள சிறுகனூரில் இறங்கி, அங்கிருந்து மேற்கே பிரியும் சாலையில் 4 கி.மீ.,தூரம் சென்றால் திருப்பட்டூரை அடையலாம், சிறுகனூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு.



Om Guruve Namaha...


நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்

Saturday, September 2, 2017

Siruvapuri Arulmigu Sri Balasubramaniyar

மனையும் மங்கலமும் அருளும் சிறுவாபுரி முருகன்!

   
Siruvapuri Arulmigu Sri Balasubramaniyar

Thiruppugazh, Source
சென்னை அருகே செங்குன்றத்தில் இருந்து நெல்லூர் செல்லும் வழித்தடத்தில் அமைந்துள்ளது சிறுவாபுரி. இங்குள்ள சுமார் 500 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த பாலசுப்ரமணியர் கோயில் அருணகிரிநாதர் அர்ச்சனை திருப்புகழ் பாடிய ஸ்தலமாகும்.

Siruvarpuri Arulmigu Sri Balasubramaniyar, Image source

ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் கிரகத்துக்கான மிக முக்கிய காரகத்துவங்கள் மனையும் மங்கலமும் ஆகும். ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் நல்ல காரகத்துவம் பெற்று அமைந்திருந்தால் வீடுமனை சொத்தை ஆளும் பாக்கியத்தை பெறுவார். அதைப்போலவே மங்கலகாரகன் என்றழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தின் அருளால் திருமண பாக்கியமும் கைகூடுகிறது.

Siruvapuri Sri Valli Manalan, Image source

Sri Balasubramanian Sri Valli Thayar Manakolam, Image source

Siruvapuri Sthala Thirumanakolam, Image source

சிறுவாபுரி பாலமுருகன் ஸ்தலம் இருந்த இரண்டுக்குமான பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. வீடு உள்ளிட்ட கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், வீடு, நிலம் வாங்க விரும்புவோர், நிலம், பிளாட் உள்ளிட்ட சொத்துத் தகராறுகளில் வழக்குகளை சந்திப்போருக்கு ஜோதிடர்களால் சிறுவாபுரி பரிகார ஸ்தலமாக பரிந்துரைக்கப்படுகிறது.

Sri Arunagiri Nathar, Image source

Siruvapuri Sri Arunagirinathar, Image source

விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ் செங்கோடன் மயூரமுமே. 

- Kandar Alangaram, Sri Arunagirinathar, Source

மங்கலகாரன் என்பதால் சிறுவாபுரி பாலமுருகனின் அருட்கடாட்சத்தால் திருமண பாக்கியம் கைகூடுவதை எண்ணிலடங்கா பக்தர்கள் அனுபவத்தில் உணர்ந்துள்ளனர். செவ்வாய்க்கிழமைதோறும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டு தமிழ்க்கடவுளை வழிபட்டு தோஷ நிவர்த்திகளை பெறுகின்றனர். 


Siruvapuri Maragadha Mayil, Image source
மரகதப் பச்சையால் ஆன முருகன் விக்ரகமும், மயிலும் இக்கோயிலின் சிறப்பம்சமாகும். சென்னை செங்குன்றம் அருகே அமைந்துள்ள சிறுவாபுரிக்கு அன்பர்கள் அனைவரும் சென்று தமிழ்க்கடவுளின் பேரருளால் மனையும் மணவளமும் பெற்று சிறக்க வேண்டுகிறேன்.

Sri Arunagirinathar's Kandhar Anuboothi, Source


Sri Arunagirinathar's Thiruppugazh receital by Palani Othuvar Venkatesan, Video souce

Other informative web links on Siruvapuri Temple: 

 

ஆலயம் - தொடர்ப்பு & முகவரி:

 

Arulmigu Sri Balasubrahmanyam Temple
Chinnampedu, Siruvapuri
Kararpettai Via,
Ponneri (Tk) ,
Tiruvallur - 601 206
Phone : (+91) / 044 - 27992133
Mobile : (+91) 9788963245

 

Om Guruve Namaha...


நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்

Monday, July 17, 2017

Arulmigu Sri Bairavar Theipirai Vazhipadu

தேய்பிறை அஷ்டமி‬ பைரவர் வழிபாடு 

 

Thiruvannamalai Arulmigu Sri Kalabairavar, Image source


நட்சத்திரம், திதிகள், கிழமைகள் போன்றவற்றில் பல்வேறு வழிபாடுகள் செய்கிறோம். சாதாரணமாக சுபகாரியங்கள் செய்வதற்கு தவிர்க்கும் திதிகளில், இறைவனுக்குரிய வழிபாடுகளை மேற்கொள்கிறோம். கிருஷ்ணருக்கு அஷ்டமி திதியிலும், ராமருக்கு நவமி திதியிலும் ஜெயந்தி கொண்டாடுகிறோம்.

Vairavanpatti Arulmigu Sri Bairavar, Image source

அந்த வகையில் இறைவனின் அம்சமாக, அவதாரமாக இருக்கும் பைரவருக்கு தேய்பிறையில் வரும் அஷ்டமி வழிபாடு மிக சிறப்பானதாகும். பைரவர் வழிபாடு ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்டு காலம், காலமாக நடைபெற்று வருகிறது. பைரவ மூர்த்திகளில் 64 திருவடிவங்கள் உள்ளதாகவும் மேலும் 108 வரை உள்ளதாகவும் அறியப்படுகிறது. ஒவ்வொரு பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் வடகிழக்குப் பகுதியில் பைரவருக்கு தனி சந்நதி இருக்கும். அனைத்து சிவாலயங்களிலும் காலையில் சிவபூஜை சூரியனிடமிருந்து தொடங்கி அர்த்த ஜாமத்தில் பைரவருடன் முடிவடைகிறது.
Arulmigu Sri Bairavar, Image source and additional information

நட்சத்திரம், திதிகள் இணைந்து வருவதும், தனியாக வருவதும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்ததாகும். பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி திதி சிறப்பானதாகும். கார்த்திகை மாதத்தில் வரும் அஷ்டமி கால பைரவாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. பைரவரை தினசரி வணங்கினாலும், அஷ்டமி திதிகளில் வணங்குவது சிறப்பாகும். அன்றைய தினம் அஷ்டலட்சுமிகளும் வழிபடுவதாக புராண, சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அதனால் தான் ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு சிறப்பு அடைமொழி கொடுத்துள்ளனர்.

  1. சித்திரை: ஸ்நாதனாஷ்டமி
  2. வைகாசி: சதாசிவாஷ்டமி 
  3. ஆனி: பகவதாஷ்டமி 
  4. ஆடி: நீலகண்டாஷ்டமி 
  5. ஆவணி: ஸ்தாணு_அஷ்டமி
  6.  புரட்டாசி: சம்புகாஷ்டமி 
  7. ஐப்பசி: ஈசான சிவாஷ்டமி 
  8. கார்த்திகை: கால பைரவாஷ்டமி 
  9. மார்கழி: சங்கராஷ்டமி 
  10. தை: தேவதாஷ்டமி 
  11. மாசி: மகேஸ்வராஷ்டமி 
  12. பங்குனி: திரியம்பகாஷ்டமி
சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு. ஒருவகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர், சிவனுடைய அம்சம் ஆவார். அஷ்ட பைரவர்களும் அவர்களுக்கான தேவிகள் அஷ்ட பைரவிகளும் உண்டு. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவ வழிபாடு செய்ய உகந்தது ஆகும்.  அந்நாள் பைரவாஷ்டமி என்று வழங்கப்படுகிறது. அதிலும் தேய்பிறை அஷ்டமி கால பைரவாஷ்டமி என்று வழங்கப்பட்டு சிறப்பு பெறுகிறது.

Arulmigu Sri Dhaksinakasi Kalabairavar, Image source

ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் பஞ்ச எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். ஐந்து வகை எண்ணெய் கொண்டு ஏற்றப்பட வேண்டும், ஐந்து தனி தனி அகல் எடுத்துக் கொண்டு ஒரு அகலில் நல்லெண்ணெய். இன்னொரு அகலில் இலுப்ப எண்ணெய். மற்றொன்றில் விளக்கு எண்ணெய். அடுத்ததில் பசு நெய். அடுத்த அகலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பைரவ சுவாமியை நோக்கி அகலின் திரி முகம் வைத்து தனித்தனியாக ஏற்ற வேண்டும், ஒரு அகலில் ஏற்றிய நெருப்பில் இருந்து இன்னொரு தீபம் ஏற்றக்கூடாது, (ஒவ்வொரு எண்ணெய் கொண்டு எரியும் தீபத்தின் சக்தி வெவ்வேறாகும், ஒன்று இன்னுமொன்றோடு சேரக்கூடாது சக்தி மோதல் உண்டாகும்) இவ்வாறு தனித்தனியாக ஏற்றி வழிபட்டால் தீரா பிரச்சினையும் தீரும், காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும்.

Arulmigu Sri Bairavar, Image source

நல்லருள் கிட்ட பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்று பொருள். படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தெழில்களை செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்கு திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது. படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும்.
Arulmigu Sri Swarna Bairavar, Image source

எந்தவித பூஜைகள் செய்யா விட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார். முதலில் துவங்கும் காலை பூஜையும், இரவில் நடக்கும் இறுதியான பூஜையும் ஸ்ரீ பைரவருக்கே உரியது. பற்றற்ற நிலையில் நிர்வாண கோலத்தில் பைரவர் வீற்றிருப்பதால் பைரவர் விக்ரகத்தை தொட்டு வணங்குதல் நாமே சென்று புஷ்பம் சாற்றுதல் ஆகியவை கூடாது.
Thadikombu, Arulmigu Sri Swarna Akarshana Bairavar, Image source

சித்திரை, ஐப்பசி மாதங்களில் வரும் பரணி நட்சத்திர நாட்கள் ஸ்ரீ பைரவருக்கு மிக உகந்த நாட்கள் ஆகும். ஞாயிறு முதல் சனி வரையிலான வாரத்தின் அனைத்து நாட்களும் ஸ்ரீ பைரவரை வழிபட உகந்த நாட்கள் தான். ஆயினும், தேய்பிறை மற்றும் வளர்பிறை நாட்களில் வரும் அஷ்டமி திதி ஸ்ரீ பைரவரை வணங்குவதற்கு மிக விசேஷமான நாட்களாக நடைமுறையில் உள்ளது.

 ‘‘அட்ட பைரவருமோருருவாகி கிருட்ண பட்ச யட்டமியந்தியில்
அருள் பரிபாலிக்க தொழுதிருப் பாருக்காததேது’’ 
 - (என்கிறது அகஸ்தியர் நாடி)

சீர்காழியில் உள்ள சட்டை நாதர் என்னும் பைரவரை வழிபடுவதன் சிறப்பை இப்படி விளக்குகிறது அகஸ்திய நாடி.

Srikazhi Arulmighu Uma Mageshwarar - Appan Thoniappar, Image source

Srikazhi Arulmigu Sri Sambhandhar, Image source

திருஞானசம்பந்தராகப் போற்றப்படும் ஆளுடைப் பிள்ளை என்ற ஞானக் குழந்தை ஞானம் பெற்ற கோயில் இது. பிரம்ம தீர்த்தக் கரையில் அம்பாள் பொற்கிண்ணத்தில் ஞானசம்பந்தருக்கு பால் ஊட்டிய தலம். நாம் ஒவ்வொரு வரும் தொழ வேண்டிய அற்புதக் கோயில். ஆதி சங்கரர் தமது "சௌந்தர்ய லஹரி" என்ற நூலில், ‘‘ஞானப்பால் பார்வதி தேவியிடம் இந்த திராவிட சிசு உண்டது சத்தியம்’’ என கொண்டாடுகிறார்.

தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடிக்
காடு உடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடு உடைய மலரான் முனை நாள் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடு உடைய பிரமாபுர[ம்] மேவிய பெம்மான் இவன் அன்றே
                                                        -  திருஞானசம்பந்த பிரான்


Sirkazhi Arulmigu Sri Sattainathar, Image source

திருநாவுக்கரசரை "அப்பர்" என ஞானசம்பந்த பிரான் அழைத்துப் போற்றிய புண்ணிய கோயில் இந்த சட்டநாதர் கோயில். சீர்காழி என்ற ஊருக்கே புகழைச் சேர்த்த இந்த சட்டநாதர், பைரவ சுவாமியின் மறு பதிப்பு வேற்றுருதான். அஷ்டமி திதி தேய்பிறையில் இங்கு எட்டு வித பைரவ மூர்த்திகளும் கூடி நின்று பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனராம். எனவே, "தேய்பிறை அஷ்டமி திதி மாலை வேளையில் சட்ட நாதனை தொழுபவர் பெரும் பாக்யவான்களே" என்கிறார் அகஸ்தியர்.

 
Video source, Thiru Gnanasambhdhar'in Padal on Brahamapuram

12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீ பைரவர். நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே. தேவ, அசுர, மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான் ஆவார். சனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீ பைரவரே ஆவார். சனியின் வாத நோயை நீக்கிய வரும் பைரவரே.
Kundadam Arulmigu Sri Kongu VadukanathaSwamy,Image source

தன் தமையன் எமன், பைரவரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட அவன் தம்பி சனீஸ்வரன், பைரவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான். தவ வலிமையால் பைரவர் அவன் முன் தோன்றி, மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும், கால வர்த்தமான நிர்ணயப்படி (ஜோதிட ரீதியாக சனிப் பெயர்ச்சிப்படி) நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார். அப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியப் பிரமாணம் பெற்றுக்கொண்டார்.

சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும், அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந்தால் அவரகளுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்ய வேண்டும் என பைரவபெருமானிடம் விரும்பினார். அதனால் தான் ஏழரை நாட்டுச்சனி, அஷ்டமச்சனி, ஜன்மச்சனியால் அவதிப்படுவோர் பைரவ வழிபாடு பண்ணுவதன் மூலம் அத்தொல்லைகளிலிருந்து விடுபட முடியும்.

Thalainayaru Arulmigu Sri Sattainatha Swamy, Image source and additional information
 
தேய்பிறை அஷ்டமி, குறிப்பாக கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி பைரவ வணக்கத்திற்கு மிகவும் சிறந்தது. சாதாரணமாக நாய் வாகனம் பைரவரின் பின்புறம் வலப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும்.சில இடங்களில் இடப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும்.

Nagapattinam Arulmigu Sri Bairavar, Image source

மிக அரிதாக சில இடங்களில் மட்டுமே இருபக்கமும் நாய் வாகனங்களுடன் பைரவர் காட்சி தருகிறார். இவ்வாறு இடப்பக்கம் மற்றும் இரு வாகனங்களுடன் உள்ள பைரவ பெருமான் மிகுந்த சக்தியுடன் விளங்குவதாக ஐதீகம். ஏவல், பில்லி, சூனியம், பேய் பிசாசு முதலியவற்றின் தொல்லைகளிலிருந்து பூரண விடுதலை அடைய, வாழ்வில் வளம் பெற, திருமணத்தடைகள் நீங்கிட, பிதுர்தோஷம், சனி தோஷம், நீங்கி பைரவர் வழிபாடு மிகவும் உதவும்.

Adiyamankottai Arulmighu Sri Kala Bairavar, Image source

தேய்பிறை அஷ்டமி நாளில் அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வணங்குகின்றனர். அந்த நாளில் நாம் பைரவரை வணங்குவதால் பைரவரின் அருளோடு அஷ்ட லஷ்மிகளின் அருளும் கிடைக்கப் பெறுவோம். ராகு காலத்தில் பைரவர் சன்னதியில் அமர்ந்து சொர்ணாகர்ஷண பைரவரின் மூல மந்திரத்தை ஜெபித்து வந்தால் கடன் தொல்லை நீங்கும். 

பைரவ காயத்ரி

ஷ்வானத் விஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி

தன்னோ பைரவ ப்ரச்சோதயாத்!

இத்தகைய சிறப்பு வாய்ந்த அஷ்டமி வழிபாட்டினை பின் பற்றி எல்லா நலமும் அடைவோமாக!. "ஈசன் அருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!


தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!


காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி! போற்றி! 

The many contents of this article was forwarded to me in an email and the contents correlate with several articles (article 1article 2 , article 3) posted in this blogspace. I have added some of my one contents to enrich this article. I did some internet searches to find out the original sources of this post, it is possible that this article is being composed from several other sources. We would like to thank the authors (ஆதிரை, தில்லை இளந்தென்றல்) for their articles.
Source 1
Source 2 

Additional information on Arulmigu Sri Kala Bairavar: agasthiar.org
Article from Thalir blogspace

 Om Guruve Namaha...  

 

நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்